பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக கட்சி கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேமுதிக சார்பில் 40 பாராளுமன்ற தொகுதிக்கும் விருப்ப மனு இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்று கட்சி தலைமை அறிவித்தது.
அதன்படி கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு வினியோகம் செய்து தொடங்கி வைத்தார்.
இதில் துணை செயலாளர்கள் சுதிஷ், பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொது தொகுதிக்கு ரூ. 20 ஆயிரம், தனி தொகுதிக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம் செலுத்தி ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனு வாங்கி சென்றனர். சுதீசும் விருப்ப மனுவை பிரேமலதாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
பின்னர் பிரேமலதா தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.