டெல்லி, ஜன. 16 –
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ,உத்தராகண்ட் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், சுகாதாரத்துறை செயலாளர்களுடன் தேர்தல் ஆணையம் நேற்று தனித்தனியாக காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியது.
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் உள்ள நிலவரம், கொவிட் சூழல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார் மற்றும் அனுப் சந்திரா பாண்டே, துணை ஆணையர்கள், பொது செயலாளர் ஆகியோர் விரிவான ஆய்வு நடத்தினர். தடுப்பூசி நிலவரம், முன்களப் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதை விரைவாக முடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அதன் பின் தேர்தல் ஆணையம் கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பித்தது:
2022 ஜனவரி 22ம் தேதி வரை பேரணி, பாதயாத்திரை, ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை. அதன் பின் நிலைமைக்கு ஏற்ப நிலவரத்தை ஆராய்ந்து, மேற்கொண்டு உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும். 2022, ஜனவரி 22ம் தேதி வரை எந்த அரசியல் கட்சியும், வேட்பாளர்களும் அல்லது தேர்தல் தொடர்பான குழுவினர் பேரணி நடத்த அனுமதி இல்லை. ஆனால் அதிகபட்சம் 300 பேர் அளவில் அல்லது அரங்கத்தின் கொள்ளளவில் 50 சதவீதம் பேர் கலந்து கொள்ளும், அரசியல் கட்சிகளின் உள்ளரங்கு கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் விலக்கு அளித்துள்ளது. கொவிட் தடுப்பு நடவடிக்கைகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஆகியவற்றை பின்பற்றுவதை அரசியல் கட்சிகள் உறுதி செய்ய வேண்டும்.




















