மதுக்கூர், பிப். 06 –
தஞ்சாவூர் மாவட்டம், வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் வெளி மாநிலத்திற்கான விவசாயிகள் சுற்றுலா பயணத்தில், தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்த பிற வெளி மாநிலங்களின் நிலைகளை அறிந்துக் கொள்வதற்காக சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட்டது. அப்பயணத்திற்கு மதுக்கூர் வட்டாரத்தை சார்ந்த 20 விவசாயிகளை ஐந்து நாள் பயிற்சிக்கு மத்திய தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் காசர்கோட் கேரளா அழைத்துச் சென்றனர்.
அதுக் குறித்து ஐந்து நாட்கள் நடைப்பெற்ற சுற்றுலாப் பயணத்தின் போது, சமூக அறிவியல் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் .பொன்னுசாமி கால்நடைகள் வளர்ப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் தீவன பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் தெரிவித்தார்.
பூச்சிகள் துறை பேராசிரியர் முனைவர். சுசித்ரா தென்னை மரங்களை அதிகமாக தாக்கும் காண்டாமிருக வண்டு, சிகப்புக்கோன் வண்டு மற்றும் ரூகோஸ் வெள்ளை சுருள் ஈ தாக்குதலை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் அதனை கட்டுப்படுத்துதல் குறித்த தங்கள் ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சி செய்த தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துக் கூறி அவர்கள் பயன்படும் வகையில் விளக்கினார்.
நோயியல் துறை உதவி பேராசிரியர் முனைவர். டாலியாமோல் விவசாயிகளிடம் தெரிவிக்கும் போது, தென்னையை அதிகமாக தாக்கும் குருத்து அழுகல் நோய், தென்னையில் சாறு வடிதல் மற்றும் வேர் வாடல் நோயினால் பாதிக்கப்பட்ட மரங்களை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த தொழில் நுட்பங்களை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதுக் குறித்து எடுத்துக் கூறினார்.
முனைவர் .சுதா தென்னை தாய் மரங்கள் தேர்வு செய்தல், ஒட்டு கட்டுதல் தென்னை நாற்றுகள் தேர்வு செய்தல் மற்றும் தென்னை நடவு செய்தல் குறித்த தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் அவர்கள் புரிந்துக் கொள்ளும் வகையில் மேற்கோள் காட்டி எடுத்துரைத்தார்.
மேலும் தென்னையில் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் துறை முனைவர் .மணிகண்டன் தென்னை எண்ணெய் என்று மட்டும் அல்லாமல் அது ஒரு உணவுப் பயிர், மருத்துவ குணமிக்கது, குடிக்கும் பானம், கார்பன், கலை பொருட்கள் மற்றும் கயிறு தயாரித்தல் போன்ற பொருட்கள் தயாரிக்க உதவுவதாக தெரிவித்தார்.
மேலும் இத் தென்னையில் உள்ள லாரிக் அமிலம் தோல் நோய் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கிறது எனவும், இதில் ஜீரோ கொழுப்பு ,ஜீரோ சுகர் ,உடல் வளர்ச்சிக்கு நன்மை தரக்கூடிய தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளது எனவும் அப்போது விவசாயிகளிடம் தெரிவித்தார். மேலும் மதிப்பு கூட்டு பொருள் தயாரிக்கும் இயந்திரங்களை நேரடியாக காண்பித்து விளக்கமும் அளித்தார்.
பயிர் மேலாண்மை துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். நிரல் விவசாயிகளிட்ம தெரிவிக்கும் போது, தென்னையில் உள்ள பல்வேறு வகையான மாற்றங்கள் மற்றும் மாற்றத்தினை பயன்படுத்தி புதிய வகையான ரகங்கள் உற்பத்தி செய்தல் குறித்து விவசாயிகளிடம் நேரில் காண்பித்து விளக்கம் அளித்தார்.
முதன்மை விஞ்ஞானிகள் துறை பேராசிரியர் முனைவர் .தம்பன் அரசு சங்கங்கள் மூலம் குழுக்கள் அமைத்தல் அதன் மூலம் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைத்தல் மேலும் தொழில் தொடங்குதல் போன்ற விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தினை குழுக்கள் மூலம் மேம்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார்.
நுண்ணுயிர் இயல் துறை பேராசிரியர் முனைவர் பால்ராஜ் உயிர் உரங்கள் பயன்படுத்துதல் மற்றும் இயற்கை பூஞ்சான கொல்லிகள் பயன்படுத்துதல் குறித்து காணொளி காட்சி மூலம் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. தென்னையில் நீரா பானம் உற்பத்தி செய்தல் குறித்த செயல்விளக்கம் முனைவர் .பாண்டியன் அவர்கள் விவசாயிகளுக்கு நேரடியாக செய்து காண்பித்தார்.
முனைவர் .பஞ்சவர்ணம் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள ஊடுபயிர் சாகுபடி முறைகள் நாற்றங்கால் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைய முறை முதலியவற்றை விவசாயிகளுக்கு நேரடியாக காண்பித்தார். மண் அறிவியல் துறை முனைவர் .செல்வமணி மண்வளத்தினை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் தெரிவித்தார். மேலும் மண் பரிசோதனை முடிவின் அடிப்படையில் உரத்திணை பயன்படுத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இவ்வாறு வெளி மாநிலமான கேரளாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மதுக்கூர் வட்டாரத்தை சார்ந்த 20 விவசாயிகள் தென்னை மர வளர்ப்பு மற்றும் மதிப்புக் கூட்டு தயாரித்தல் குறித்த பல்வேறு நலன் பயக்கும் தகவல்களையும், வழிக்காட்டுதல்களையும் வேளாண்மை பேராசிரியர்களிடம் கேட்டறிந்துக் கொண்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.























