சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றிய செல்வராஜ், நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்த வைத்தியநாதன், திருவண்ணாமலை, செங்கம் தீயணைப்பு நிலையங்களில் பணிபுரிந்த சந்திரன், சுந்தரம், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலராகப் பணிபுரிந்த மதுசூதனன், குறிஞ்சிப்பாடி, தீயணைப்பு நிலையத்தில், யந்திர கம்மியர் ஓட்டியாக பணிபுரிந்து வந்த ராஜாராம்.
கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், ஈரோடு கொடுமுடி, ஏர்வாடி, அந்தியூர் தீயணைப்பு நிலையங்களில் பணிபுரிந்த கருணாகரன், புருஷோத்தமன், தங்கப்பிரகாசம், முத்து, குழந்தைராஜ், கே.பி.மதியழகன், திண்டுக்கல் தீ தடுப்புக் குழுவில் பணிபுரிந்த சீனிவாசகம்.
திட்டக்குடி, திருக்கோவிலூர், காரைக்குடி, காட்பாடி தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்த வேலாயுதம், பாபுசிங், முருகேசன், நாகராஜன், வடசென்னை, வ.உ.சி. நகர் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்த கோபால்.
வேலூர்-ஒடுக்கத்தூர் தீயணைப்பு நிலையத்தில் முன்னணி தீயணைப்பாளராகப் பணிபுரிந்த சுப்பிரமணி, உத்தமபாளையத்தில் பணிபுரிந்த கிருபாகரன், ராஜபாளையத்தில் பணிபுரிந்த பரமசிவன்.
தேனி, மயிலாடும்பாறையில் பணிபுரிந்த காமராஜ், போளூரில் பணிபுரிந்த காசாம்பு, ராணிப்பேட்டையில் பணிபுரிந்த அன்பு, உடுமலையில் பணிபுரிந்த ஜவஹர் ஆகியோர் உடல் நலக்குறைவால் காலமானார்கள் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனையும், அனுதாபமும் அடைந்தேன்.
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் பணிபுரிந்து உயிரிழந்த நிலைய அலுவலர், தீயணைப்பாளர் மற்றும் யந்திர கம்மியர் ஓட்டி ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 தீயணைப்பாளர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.