காட்சி, ஆவணப்படம்
திருவள்ளூர், மார்ச். 07 –
திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருவள்ளூர் பஸ் நிலையத்திற்குள் புல்லரம்பாக்கம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமாரராஜா என்பவரின் மகன் பரமேஷ்வரன் நேற்று மார்ச் 6 ஆம் தேதியன்று அதிகாலை 4 .45 மணியாளவில் இரு சக்கர வாகனத்தில் உள்ளே செல்லும் போது எதிர் திசையில் இருந்து வந்த டிப்பர் லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியது.
அதில் நிலை தடுமாறி கீழ் விழுந்த வியாசர்பாடி அம்பேத்கர் கலைக் கல்லூரியில் பி.ஏ. டிபன்ஸ் பிரிவில் இரண்டாம் ஆண்டு கல்விப் பயிலும் மாணவரின் முகப்பகுதியில் உள்ள வலது கண்பட்டையிலும், வலது நெற்றியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.
இது குறித்து திருவள்ளூர் நகர காவல் நிலையப் போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கூறியவாறு பரமேஷ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் தான் என்.சி.சியில் இருப்பதால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் பயிற்சி தேர்வில் கலந்துக்கொள்ள வேண்டி அப்பாவின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புல்லரம்பாக்கத்தில் இருந்து வந்தேன் என்றும், மேலும் திருவள்ளூர் பஸ்நிலையத்தில் வண்டியை நிறுத்தி விட்டு செல்வதற்காக அவ்வதிகாலைப் பொழுதில் வந்ததாகவும் அப்போதுதான் இவ்விபத்து நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுக் குறித்து காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் ஒருவழிச்சாலை வழியாக வேகமாகவும், கவனக் குறைவாகவும் டிப்பர் லாரியை ஓட்டி வந்து தனது மீது மோதி விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக மேல்நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.




















