மீஞ்சூர், மார்ச்.05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.136.90 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையில் முதல் சடலம் எரிக்கப்பட்டு தகனம் செய்யும் பணிகள் சோதனை அடிப்படையில் துவக்கப்பட்டது.
மீஞ்சூர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு, அதன் முதல் கட்டமாக இன்று தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட யாரும் உரிமை கோராத சடலத்தை எரிக்கும் பணி நடைபெற்றது.
எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற செயல்அலுவலர் வெற்றிஅரசு, உதவி செயற் பொறியாளர் ஜெயக்குமார், துணைத் தலைவர் அலெக்சாண்டர், பொறியாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலையில் தகனம் செய்யும் பணி நடைபெற்றது. பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தகனத்திற்கு இறுதி மரியாதை செலுத்தினர்.























