திருவாரூர், செப். 30 –
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் வேண்டி மாணவர்கள் சார்பில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் கலந்து கொண்டு அவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படாமல் குடவாசல் பகுதியிலேயே புதிய கட்டிடம் அமைய வேண்டும் எனவும் அப்போது அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் செயல்பட்டு வரும் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதில் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரி தற்போது வரை குடவாசலில் உள்ள அரசு பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர கட்டிடம் கேட்டு மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குடவாசல் பேருந்து நிலையத்தில் நிரந்தர கட்டிடம் வேண்டி காத்திருப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் கலந்துகொண்டு மாணவர்கள் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம்
இந்த கல்லூரியில் குடவாசல் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் நலனுக்காக கல்லூரிக்கு என நிரந்த கட்டிடம் கேட்டு சட்டமன்றத்திலே தாம் முறையிட்டதாகவும் அதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அதே பகுதியில் உடனடியாக கட்டிடம் அமைத்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.
ஆனால் தற்பொழுது குடவாசலில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் பேருந்து வசதி இல்லாத செல்லூர் பகுதியில் புதிய கட்டிடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. இதனால் ஏழை எளிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவும், குடவாசல் பகுதியிலேயே கல்லூரிக்கான புதிய கட்டிடத்தை அரசு அமைத்து தர வேண்டும் என தெரிவித்தார்.
பேட்டி: இரா.காமராஜ் நன்னிலம் சட்ட மன்ற உறுப்பினர் முன்னாள் உணவு துறை அமைச்சர்






















