கயத்தாறு:

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த வீரர் சுப்பிரமணியனும் பலியானார். இதையடுத்து சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி, தந்தை கணபதி மற்றும் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர். அவர்களை பல்வேறு கட்சியினர், அமைப்பினர் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தன. இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு தலைவர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு சுப்பிரமணியனின் கிராமமான சவலாப்பேரி மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ராணுவ வீரர் சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி மற்றும் தந்தை கணபதி ஆகியோர் சுப்பிரமணியன் படத்திற்கு இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கையால் எங்கள் கிராமமே சந்தோஷம் அடைந்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இது 40 வீரர்களின் தியாகத்திற்கு கிடைத்த பரிசு ஆகும். இதற்கு இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here