புதுச்சேரி:

புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் பயங்கரவா முகாம்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

ஜம்மு, காஷ்மீர் அருகே விமான படையினர் நடத்திய தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்திய விமான படை வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ஜம்மு, காஷ்மீர் அருகிலுள்ள பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படைக்கு என் வணக்கங்களை தெரிவிக்கிறேன். உங்களால் நாட்டுக்கு பெருமை.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

புதுவை முன்னாள் எம்.பி. கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இன்று அதிகாலை நேரத்தில் இந்திய ராணுவத்தின் விமானப் படையானது பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் மீது குறிப்பாக புல்வாமா தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது சரியான பதிலடி.

நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இது இந்திய மக்களுக்கு மட்டுமல்ல பயங்கரவாதத்தை எதிர்க்கக் கூடிய மனிதாபிமானம் உடைய அத்தனை பேரும் வரவேற்கக்கூடிய செயலாகும்.

இந்த தருணத்தில் நாம் அத்தனை பேரும் ஜாதி, மதம், பாகுபாடு அத்தனையும் மறந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்களுக்கும், முப்படை தளபதிகளுக்கும், இந்திய பிரதமருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

மேலும் இந்திய அரசுக்கும், இந்திய ராணுவத்துக்கும் துணை நிற்க வேண்டிய நேரம் என்பதை தெரியப்படுத்த வேண்டியது எனது தேசிய கடமை. உலகில் எந்த பகுதியில் பயங்கரவாதம் இருந்தாலும் எதிர்க்க வேண்டியது மனிதகுலத்தின் தலையாய கடமை. ஜெய் ஜவான், ஜெய்பாரத்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here