சென்னை, ஜூலை 21-

நேற்று தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த பத்தாண்டுகளில் கூடுதலாக 11.75 இலட்சம் எக்டேர் பயிரடச் செய்து தற்போதுள்ள நிகர சாகுப்படி பரப்பான 60 விழுக்காட்டில் இருந்து 75 விழுக்காடாக உயர்த்திட வேண்டும் எனவும், மேலும் இரு போக சாகுபடி நிலங்களை 10 இலட்சம் எக்டேரில் இருந்து 20 இலட்சம் எக்டேராக உயர்த்தவும், கிராமங்கள் வாரியாக நிலங்களை கணக்கெடுத்து, சாகுபடிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உருவாக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

உழவர்களின் தேவைகள்

உழவர்களின் தேவைக்கேற்ப விதைகள்,இராசயன உரங்கள் போன்ற வேளாண்மை இடுபொருட்களை இருப்பு வைத்து உழவர்களுக்கு வினியோகம் செய்வதற்கு உரியநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் விரிவாக்கப் பணிகள் தொய்வின்றி விரைந்து மேற்கொள்ளவும் கேட்டுக் கொண்டார். மேலும் பருத்தி சூரியகாந்திப் பயிர்களில் உரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இப்பயிர்களின் உற்பத்தி திறனை உயர்த்தி, அகிலயிந்திய அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகம் இடம் பிடிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என கூறினார்.

வேளாண் நிலங்களில் மழைநீர் சேமிப்பு

வேளாண் நிலங்களில் மழைநீரினைச் சேமிக்க பண்ணைக்குட்டைகள், தொகுப்பு அணுகு முறையில் நுண்ணீர்ப் பாசனத்திட்டம், உ.ழவர்களை ஒருங்கிணைத்து, சிறுதானியங்களில் சிறப்பு இயக்கம்,இயற்கை வேளாண் முறையினை பிரபலப் படுத்துதல், தோட்டக்கலை பயிர்களுக்கு தனிக்கவனம் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

வேளாண் விளைப்பொருட்களுக்கு இலாப விலை

உழவர்களின் விளைப்பொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைப்பதற்கு மின்னணு ஏல முறை அறிமுகம் செய்தல், ஒருமாவட்டம் ஒரு விளைபொருள் என்ற அணுகு முறையின் படி உற்பத்தியை உயர்த்தி அதற்கான மதிப்புக்கூட்டும் தொழிற்சாலைகளை உருவாக்குதல் படித்த இளைஞர்களை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண் தொழில் முனைவோர்களாக உருவாக்குதல், அனைத்து கிராம வேளாண் மறுமலர்ச்சித் திட்டம் போன்ற தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்தார்.

சூரிய சக்தி பயன்பாடு

அபரிதமாக கிடைக்கும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி பாசனத்திற்கு பயன்படுத்திட ஏதுவாக அதிக அளவில் சூரியசக்தி பம்புசெட்டுகள் நிறுவ வேண்டும், மேலும் நவீன தொழிநுட்ப செயல் விளக்கங்கள் மூலம் உழவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். என அவர் கேட்டுக்கொண்டார். மேலும் தமிழ்நாட்டில் தோட்டக்கலை பயிர்களில் உற்பத்தியை உயர்த்தவும் தமிழக மக்களின் வசதிக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் அரசு தாவரவியல் பூங்காக்களை நன்கு பரமாரிக்க வேண்டும் மேலும் உழவர்களின் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாக நல் வாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும். என்றும் விளைப்பொருட்களைச் சேமித்து வைப்பதற்கு ஏதுவாக சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

உழவர் சந்தை

தமிழகத்தில் ஏற்கனவே துவங்கப்பட்ட அனைத்து உழவர் சந்தைகளும் நல்ல முறையில் இயங்கவும், இந்த நிதியாண்டில் புதிய உழவர் சந்தைகளை உருவாக்கவும், செயல்படாமல் இருக்கும் உழவர் சந்தைகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் எனவும்  பணித்தார்.

தற்போது நிலையில் வேளாண்மை பணிகளுக்கு போதிய அளவு ஆட்கள் கிடைக்காத காரணத்தாலும் வேளாண் உற்பத்தியை உயர்த்தும் வகையிலும் வேளாண் பொறியியல் துறையின் மூலம் உழவர்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வாகனங்களை மானியத்தில் வழங்குதல் குறித்தும் அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு,நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் முனைவர் வள்ளலார்,ஆபிரகாம், வேளாண்மைத்துறை இயக்குனர் அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைஇயக்குனர் முனைவர் பிருந்தா தேவி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைச்செயலாளர் மகேஸ்வரி ரவிக்குமார், வேளாண்மைப் பொறியியல் துறை முதன்மை பொறியாளர் முனைவர் முருகேசன் முதன்மை பொறியாளர் ( நதிப்பள்ளத்தாக்கு ) சந்திரசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இவ்வாய்வு கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here