சென்னை, ஜூலை 31 –
ஆகஸ்ட் மாதம் 2021 ல், நடைபெறவுள்ள ப்ளஸ் 2 வகுப்புத் துணைத் தேர்வுகளை தனித்தேர்வுகளாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சிப் பெற்றவர்களாக முதலமைச்சர் அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளார் .
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பின் வருமாறு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு பன்னிரண்டம் வகுப்பு பொதுத்தேர்வு எழுவதிலிருந்து அனைத்து மாணவர்களுக்கும் விலக்களித்ததைப் போல் ஆகஸ்ட் மாதம் 2021 ல் நடைப் பெறவுள்ள பன்னிரண்டம் வகுப்பு துணைத்தேர்வுகளைத் தனித்தேர்வுகளாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் 2016 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்பிரிவு 17 (1) இன் அடிப்படையில் அவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்து முதலமைச்சர் அரசாணை பிறப்பித்துள்ளார்.
இவ்வாறு தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்கப் பட்ட மாணவர்கள் அனைவருக்கும், மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும். மேலும் மேற்படி தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்த் திறனாளி மாணவர்கள் தாங்கள் விரும்பும் பட்சத்தில் இத்தேர்வினை எழுதலாம் என்றும், தங்களது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்கள் பின்னாளில் இந்த ஆணையின் அடிப்படையில் தேர்ச்சிப் பெற்றவர்களாக தங்களை அறிவிக்குமாறு கோரலாகாது என்றும் அவ்வாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.