மீஞ்சூர், மார்ச். 30 –
திருவள்ளூர் மாவட்டம், வாயலூர் குப்பம் பகுதியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் மோனிஷ் என்பவர் சக நண்பர்கள் ஐந்துபேருடன் மீஞ்சூர் அருகே உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற போது அக்குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். அச்சம்பவம் குறித்து காட்டூர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீஞ்சூர் அடுத்துள்ள வாயலூர் குப்பம் பகுதியில் வசித்து வருபவர்கள் குமார் மற்றும் நதியா தம்பதியினர். மேலும் இவர்களின் பத்து வயதுடைய இளைய மகன் மோனிஷ் என்பவர், மெரட்டூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தினமான நேற்று வழக்கம் போல் அவர் அப்பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் அவரது சக நண்பர்கள் ஐந்துப் பேருடன் சைக்கிளில் வீட்டின் அருகில் உள்ள துரத்திகுளம் எனும் குளத்தில் குளிக்கச் சென்றதாக தகவல் தெரிய வருகிறது.
இந்நிலையில் அக்குளத்தில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த மோனிஷ் குளத்தில் ஆழம் நிறைந்தப் பகுதியில் சென்று குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கி கரையேற முடியாமல் அலறியதாகவும், அப்போது அவரின் அலறல் சத்தம் கேட்டு சக மாணவர்கள் காப்பாற்ற முடியாமல் பயந்துகொண்டு மோனிஷின் சைக்கிள் மற்றும் உடைகளை அக்குளத்தின் அருகேயே போட்டுவிட்டு வீட்டிற்கு அவர்கள் அனைவரும் திரும்பிவுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து அவர்கள் யாரிடமும் தகவல் தெரிவிக்கவில்லையெனவும் தெரிய வருகிறது.
மேலும் இந்நிலையில் மோனீஸ் வீட்டைவிட்டு சென்று வெகு நேரம் ஆனப்பின்னும் அவர் வீடுத் திரும்பாததால், அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும், விசாரித்துப் பார்த்தும் அவர் கிடைக்காததால் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
மேலும் தொடர்ந்து அவர்கள் மீண்டும் மோனீஸ் குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்த போது சக நண்பர்களுன் அவர் குளத்தில் குளித்து கொண்டிருந்ததாக அதனைப் பார்த்த கிராமவாசி தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவ்வூர் பொதுமக்கள் அனைவரும் தண்ணீரில் இறங்கி தேடியபோது மோனீஸ் சேற்றில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது.
அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்டூர் காவல்நிலைய காவல்துறையினர் மாணவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, மோனீஸின் சக நண்பர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சோகம் மற்றும் பரபரப்பு சூழ்ந்துள்ளது.



















