தெற்காசியாவை கட்டியாண்ட மாமன்னன் இராஜராஜனின் 1036வது சதய விழாவினை முன்னிட்டு, கும்பகோணம் அருகே உடையாளுரில் அவரது சமாதி அமைந்துள்ள இடத்திலும், சென்னையிலும் அரசின் சார்பில் வல்லபாய் பட்டேலுக்கு இணையாக திருவுருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைத்து இதனை அரசு விழாவாக ஏற்று நடத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணம்,நவ. 13 –
சோழ பேரரசில், மாமன்னன் இராஜராஜ சோழன் 943ம் ஆண்டு ஐப்பசி சதய நட்சத்திரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் 2ம் பராந்தக சுந்தரசோழன், வானவன் மாதேவி ஆவர், இவரது உடன் பிறந்தோர் மூத்த சகோதரர் ஆதித்த கரிகாலன், மூத்த சகோதரி குந்தவை ஆவர். இவரது மனைவியரில் ஒலோக மாதேவி, திரிபுவன மாதேவி என்பவர் குறிப்பிடதக்கவர்கள். இரண்டாம் குந்தவையும், இராசேந்திர சோழனும் இவரது குழந்தைகள் ஆவர். இவர், 985ல் தனது 42 வயதில் முடிசூடி பதவியேற்று 28 ஆண்டுகள் வரை அரசாட்சி செய்தார். இவரது ஆட்சி காலத்தில் எழுப்பிய தஞ்சை பெரியக்கோயில் எனும் பிரகதீஸ்வரர் திருக்கோயில் இன்றளவும், சோழர் கால கட்டிட கலைக்கு சான்றாகவும், கலை பொக்கிஷமாகவும் பல நூற்றாண்டுகளை கடந்தும் காண்போரை பிரமிக்கவும், மெய்சிலிர்க்கவும் வைக்கிறது. 71 ஆண்டுகள் வரை வாழ்ந்த இவர் கடந்த 1014ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் இயற்கை எய்தினார்.
ஆண்டு தோறும் மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்தநாள் விழா ஐப்பசி திங்கள் சதய நட்சத்திரத்தன்று சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டும் 1036வது சதயவிழா வழக்கம் போல் அரசு சார்பில் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை விடப்பட்டு தஞ்சையில் சிறப்பாக இன்று நடைபெற்று வருகிறது,
அதே வேளையில் அவரது சமாதி அமைந்துள்ள கும்பகோணம் அருகேயுள்ள உடையாளுரில் மாமன்னன் தொடக்க காலத்தில்; அரண்மனையோடும், சொந்த பந்தங்களோடும், படை பரிவாரங்களுடன் வாழ்ந்து உலக நாடுகள் பலவற்றை கடல் கடந்து சென்று வெற்றி கொண்டதாகவும், தெற்காசியாவையே கட்டியாண்டதாக வரலாறு கி பி 1014ம் ஆண்டு இராஜராஜன் இறந்த பின்னர் பழையாறை அரண்மனைக்கு அருகேயுள்ள ஓடத்தோப்பில் சமாதி அமைக்கப்பட்டதாகவும், அவர் சிவதீட்சை பெற்றவர் என்பதால் அவரது சமாதி அமைந்த இடத்தில் அவரது மகன் இராஜேந்திர சோழனால் மிகப்பெரிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து நினைவுக்கோயில் அமைக்கப்பட்டது. இது குறித்த கல்வெட்டுகள் அங்குள்ள பால்குளத்தி அம்மன் கோயில் மற்றும் கைலாசநாதர் கோயில்களில் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
450 ஆண்டுகள் வரை, சோழர்களை பாண்டியர்களால் வெல்ல முடியவில்லை 3ம் இராhஜேந்திரன் காலத்தில் மாறவர்ம சுந்தர பாண்டியன் (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) படையெடுத்து வெற்றி கொண்டு பழையாறை அரண்மனை சோழன் மாளிகை அரண்மனை கங்கை கொண்ட சோழபுரம் அரண்மனை போன்ற சோழர்களின் அரண்மனைகளை வெறியோடு தகர்த்து தரைமட்டமாக்கி வஞ்சம் தீர்த்ததாக வரலாறு.
உலகே வியக்கும் வகையிலும், மலைக்கும் வகையிலும் மிகப்பிரமாண்டமாக அற்புதமான கலையம்சத்துடன் கட்டிடக்கலைக்கு மிகப்பெரிய சான்றாக இன்றளவும் திகழும், தஞ்சை பெரியக்கோயிலை கட்டிய மாமன்னனது சமாதி இன்று ஓர் சிறு கொட்டகையின் கீழ் அமைந்துள்ளது. இச்சமாதி மீது அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு பல ஆண்டுகளாக நாள்தோறும் பூஜைகள் நடந்து வருகிறது. இது மாமன்னன் இராஜராஜ சோழன் சமாதி தான் என பல வரலாற்று ஆராய்ச்சியாளர்களால், பல்வேறு கல்வெட்டு சான்றுகள் மூலமும் நிருபிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாமன்னன் இராஜராஜசோழனின் 1036வது ஆண்டு சதய விழாவினை முன்னிட்டு, கும்பகோணம் அருகேயுள்ள உடையாளுரில், இன்று பல்வேறு அமைப்பினர், இயக்கத்தினர், அரசியல் கட்சியினர் நந்தி வாத்தியம், ஜென்டை வாத்தியம் முழங்க, ராஜராஜசோழன் சிலைக்கு மாலை சூட்டி, அங்குள்ள சிவலங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் பல்வேறு அமைப்பினர், இயக்கத்தினர், அரசியல் கட்சியினர் உட்பட ஏராளமானோர் இராஜராஜன் நினைவிடத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு மலர் மாலைகள் அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தி வழிபட்டனர் என்பது குறிப்பிடதக்கது. இதில் பங்கேற்ற தமிழ் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன்,
மறைந்த பாரத பிரதமர்கள், நேரு, இந்திரா ஆகியோரால், பாராளுமன்றத்தில் போற்றி புகழப்பட்ட, ராஜ ராஜ சோழனுக்கு சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு இணையான ஒரு மாபெரும் திருவுருவசிலையினை அமைக்க வேண்டும், சென்னை மற்றும் உடையாரில், அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும். என்றும் அரசிற்கு கோரிக்கை விடுத்தார், மேலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் இதுவரை கருவறைக்கு சென்று பிற சாதியினரை பாட அனுமதிப்பதில்லை அதனை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்திட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பேட்டி : 1. புலவர் முத்துகுமார் 2. வ. கௌதமன், பொதுச்செயலாளர் தமிழ் பேரரசு கட்சி