சென்னை, செப் . 21 –
தமிழ்நாட்டிலுள்ள கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக் 2 ல், உள்ளாட்சித் தேர்தல்கள் நடைப்பெறும் ஊராட்சிகள் தவிர்த்து மற்ற கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைப்பெறும் என்று நேற்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் கிராமசபைக்கூட்டங்கள் வருடத்திற்கு நான்கு முறை நடைப்பெறும் அதாவது ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் அக் 2 காந்தி ஜெயந்தி நாளென்று மொத்தம் நான்கு முறை கிராம சபைக் கூட்டம் நடைப்பெறும்.
ஆனால் கடைசியாக கிராம சபைக் கூட்டங்கள் கடந்த ஜனவரி 26 – 2020 அன்று நடத்தப் பட்டது. அதன் பிறகு கடந்த 6 முறைகள் கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப் படவில்லை.
தற்போது அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று நடைப்பெற வேண்டிய கிராமசபைக்கூட்டங்களை நடத்திட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களின் காரணமாக தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் மற்றும் இதர மாவட்டங்களில் தேர்தல் நடைப் பெற உள்ள ஊராட்சிகளையும் தவிர்த்து பிற ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்படும்.
கிராமசபைக் கூட்டங்கள் ஊராட்சி நிர்வாகத்தின் ஆணி வேராகவும், மக்களதிகாரத்தின் அடித்தளமாகவும் அமைந்துள்ளது. கிராமசபைக் கூட்டங்கள் மூலமாக ஜனநாயக முறையில் ஊராட்சிகளின் பணிகளைத் தேர்வு செய்தல், ஊராட்சியின் நிதிநிலை அறிக்கையை சமர்பித்தல், ஊராட்சிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கலந்தாலோசித்து தாங்களே தேர்வு செய்தல், நிதி தணிக்கை செய்தல் போன்ற மிக முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமசபைக் கூட்டங்களில் நடைப்பெறும் விவாதங்கள் ஆக்கப் பூர்வமாக அமைந்து அவ்வூராட்சியின் ஒட்டு மொத்த வளர்ச்சியை எட்டிடும் வகையில் அமைகின்றன. எனவே கோவிட் – 19 தொற்று தவிர்ப்பு நெறிமுறைகளுடன் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
கிராம சபைக்கூட்டங்கள் நடத்திடும் போது அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், வழிகாட்டு நெறி முறைகளையும் முழுவதுமாக பின்பற்றிட மாவட்ட ஆட்சித்தலைவர்கள் ஊராட்சிகளை வழிநடத்திட வேண்டும் என்றும், கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்கும் போது, ஊரக வாழ் மக்கள் முக கவசம் அணிந்தும், தகுந்த தனிநபர் இடைவெளியை பின்பற்றியும் மற்றும் இதர வழிகாட்டு நெறிமுறைகளையும் சிறிதும் வழுவாமல் கடைப்பிடித்திட வேண்டும் எனவும் அவ்வறிவிப்பில் தெரிவித்துள்ளது.