புதுச்சேரி, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரியில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இரவு 10-மணிக்குள் அனைத்து வகையான மதுபானக் கடைகளையும் மூட வேண்டுமென கலால்துறை துணை ஆணையர் மேத்தியூஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறும் என்று இந்திய தேர்தல் துறையால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கலால்துறை துணை ஆணையர் மேத்தியூஸ் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார், அதில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை சரிவர பராமரிப்பதற்காக புதுச்சேரி பகுதியில் உள்ள கள், சாராயம், மதுபானக்கடைகள் மற்றும் மதுபான உரிமம் பெற்ற உணவகங்கள் / விடுதிகள் அனைத்தும் இன்று முதல் தேர்தல் நடக்கும் நாள் வரை தினமும் இரவு 10.00 மணிக்கு மூடவேண்டும் எனவும் உரிமம் பெறப்பட்ட இடத்தை தவிர வேறெந்த இடத்திலும் எந்த விதமான மது வகைகளை வைத்திருக்கவோ, விற்கவோ கூடாது என்றும், மேலும் அனுமதியின்றி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மதுபானங்களை எடுத்துச் செல்ல கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் உத்தவை மீறுபவர்கள் மீது கலால் சட்ட விதிகளின் படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலால்துறை துணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வழக்கமாக நள்ளிரவு 12 மணி வரை மதுபானக்கடை திறந்து இருக்கும் நிலையில் தேர்தல் விதியின் அமல் காரணமாக 10-மணிக்கே மூடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.






















