சென்னை, மார்ச். 02 –
தமிழ்நாடு வணிகவரி நுண்ணறிவுபிரிவு சார்பில் கடந்த ஜனவரி 10 முதல் பிப்ரவரி 13 வரை ஐந்து வாரக்காலக் கட்டத்தில் தமிழகம் முழுவதும் நடத்திய வாகனத்தணிக்கையின் வாயிலாக குற்றங்கள் பதிவு மற்றும் தண்டத்தொகையாக ரு.12.91 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்துவதில் வணிகவரித்துறை மூலம் பெறப்படும் வரி வருவாயனது பெரும் பங்கு வகிக்கிறது. அவ்வாறு அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் உரிய காலத்தில் வருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற் கொண்டு வருகிறது.
மேலும் வணிகவரித்துறையின் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை வலுவாக்குவது, ரோந்துப்பணிக் குழுக்களை கொண்டு பட்டியல் இல்லாமல் ( பில் ) செல்லும் வாகனங்களை தணிக்கை செய்யும் பணியினை திறம்பட செய்வதுப் போன்ற பல புதிய முயற்சிகளை அத்துறையினர் மேற் கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஜன 10 முதல் பிப் 13 வரை முடிவடைந்த ஐந்து வார காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகவரி நுண்ணறிவு பிரிவு அலுவலகங்கள் மூலமாக 59 ஆயிரத்து 118 வாகனத்தணிக்கைகள் நடத்தப்பட்டு, அவற்றில் 73 ஆயிரத்து 557 மின்னணு வழிப்பட்டியல்கள் ( டெலிவரி சலான் மற்றும் பில் ) சரிப்பார்க்கப்பட்டு அதில் ஆயிரத்து 583 இனங்களில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வரி மற்றும் தண்டத்தொகையாக ரூ.12.91 கோடி வசூல் செய்யப்பட்டு வணிகவரித்துறை வருவாய் ஈட்டியுள்ளது.
மேலும் அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் எவ்வித ஏய்ப்புகள் இன்று வசூல் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில் இதிப்போன்ற தணிக்கைகள் தொடர்ந்து நடத்தப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















