கும்பகோணம், மார்ச். 22 –
கும்பகோணம் அருகே உள்ள சக்கரப்பள்ளி சப்தஸ்தான விழாவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே சக்கரப்பள்ளி சப்தஸ்தான விழாவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அய்யம்பேட்டை அருகே சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழாவில் நேற்று முன்தினம் அதிகாலை அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வர சுவாமி எழுந்தருள ஏழூர் பல்லக்கு புறப்பட்டது.
இந்த பல்லக்கு அய்யம்பேட்டை, மாகாளிபுரம், வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை,சூலமங்கலம், நல்லிச்சேரி, பசுபதி கோவில், இலுப்பக்கோரை. சென்று மீண்டும் நேற்று இரவு அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே வந்தடைந்தது.
அங்கு அழகு நாச்சியம்மன் கோவில் முன்பாக சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பல்லக்கு புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் நிர்வாகிகள், அய்யம்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர், மற்றும் ஏழூர் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை சரக டிஐஜி கயல்விழி நேரடி மேற்பார்வையில், காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியா தலைமையில் பாபநாசம் துணை கண்காணிப்பாளர் பூரணி, ஆய்வாளர் வனிதா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.




















