புதுதில்லி, ஜன. 25 –
இந்தியா தனது 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை விடுதலையின் அமிர்தப் பெருவிழாவாக கொண்டாடி வருகிறது. இந்நிலையில், குடியரசு தினவிழாவை தூர்தர்ஷன் இந்த ஆண்டு பெரிய அளவில் நேரலையாக ஒளிபரப்பவுள்ளது. 75 ஆண்டு சுதந்திரத்தையொட்டி, இந்திய விமானப்படையின் விமானங்கள் 75 என்ற எண்ணை உருவாக்கி பறக்கவுள்ளன.
குடியரசு தின விழாவின் போது, குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து, ராஜ்பாத் வழியாக இந்தியா கேட் வரை, 59 கேமராக்கள் மூலம் ஒளிபரப்பப்படவுள்ளது. இதற்காக, 160-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 360 டிகிரி ஒளிபரப்பை உறுதி செய்யும் வகையில், 2021 நவம்பர் முதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குடியரசுத் தலைவர் மாளிகையின் கோபுரத்திலிருந்து, தேசிய மைதானத்தின் கோபுரம் வரை, ராஜ்பாத்தில் 33 கேமராக்களும், தேசிய போர் நினைவுச் சின்னம், இந்தியா கேட், தேசிய ஸ்டேடியத்தில் 16 கேமராக்கள், குடியரசு தினவிழாவில் 10 கேமராக்களும் நிறுவப்படுகிறது.
குடியரசு தினவிழா ஒளிபரப்பு நாளை ஜனவரி 26 அன்று காலை 9.15 மணியிலிருந்து தூர்தர்ஷனின் அனைத்து சேனல்களிலும் தொடங்கும். விழா முடிவடையும் வரை ஒளிபரப்பு தொடரும். இந்த நேரடி ஒளிபரப்பு டிடி நேசனல், டிடி நியூஸ், யூடியூப் சேனல்களிலும், நியூஸ்ஆன் ஏர் செயலி மற்றும் வலைதளத்திலும் மேற்கொள்ளப்படுகிறது.





















