தமிழகத்தில் இன்று பள்ளிகள் கல்லூரிகள் நீண்ட மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டன.  பள்ளிகள்  4 மாதங்களுக்கு பிறகும், கல்லூரிகள் 5 மாதங்களுக்கு பிறகும் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

 

சென்னை, செப். 1 –

 

கொரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இடையில் அவ்வப்போது ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கும், செமஸ்டர் மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து இருந்ததால் மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டன.

 

 

இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகளும் நடத்தப்படாமல் பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தன. தற்போது நோய் பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது. அதன்படி, ஒவ்வொரு துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தை கூட்டி, சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பது குறித்தெல்லாம் ஆலோசித்து, ஊரடங்கு தளர்வில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியானது.

 

அந்த அறிவிப்பின் படி, பள்ளிகள், கல்லூரிகள் இன்று  முதல் மீண்டும் திறக்கப்பட்டன. அந்த வகையில் பள்ளிகள் 4 மாதங்களுக்கு பிறகும், கல்லூரிகள் 5 மாதங்களுக்கு பிறகும் திறக்கப்பட்டன.

 

பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. கல்லூரிகளை பொறுத்தவரையில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும், அதில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் அனைத்து நாட்களிலும் வகுப்புகள் நடத்த உத்தரவிடப் பட்டிருக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகள் வகுப்பறையில் 50 சதவீத மாணவர்களுடன், வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 

பள்ளியில் மாணவர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகே வகுப்புக்குள் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. வகுப்பறையில் 50% மாணவர்களுடன் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

கொரோனா தடுப்பூசிபோட்டுக்கொண்ட ஆசிரியர்கள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். 

 

தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து, பள்ளி சீருடையுடன் உற்சாகமாக பஸ்சில் புறப்பட்டு பள்ளிகளுக்கு சென்றனர். பஸ் பாஸ் இல்லாமலே மாணவர்கள் பயணம் செய்தனர். 

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றுள்ளனர்.

 

தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here