அதிமுக வின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மனைவி ப.விஜயலட்சுமி இன்று அதிகாலை மருத்துவ மனையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை, செப். 1 –
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66 உடல் நலக்குறைவால் கடந்த 22ம் தேதி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 10 தினங்களாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல் நிலை குணமடைந்து இன்று வீடு திரும்ப நிலையில், இன்று அதிகாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரின் மறைவுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
சட்டமன்றத்தில் இருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பெருங்குடி தனியார் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மனைவியை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு சேகர் பாபு, ஆகியோரும் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மனைவியை இழந்து வாடும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் வி. சசிகலா அவர்களும் நேரில் சென்று ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அதிமுக எம்எல்எ.கள் அமுல் கந்தசாமி-வால்பாறை, ஸ்ரீவில்லிபுத்தூர் பான்மாஜ். கோவை.அர்ஜுனன். முன்னாள் அமைச்சர் தாமோதரன். போன்றவர்களும் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர். தொடர்ந்து கட்சித்தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என பல்வேறு பிரிவினர்கள் துக்கத்தில் பங்கேற்க வந்துக் கொண்டு இருக்கின்றனர். இன்னும் சில மணி நேரத்தில் விஜயலட்சுமியின் உடல் மருத்துவமனையில் இருந்து சென்னை தி.நகரில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பின்னர் அவரின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன