திருவாரூர், ஜூன். 26 –
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டத்திற்கு உட்பட்ட அலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரவிளாகம், மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடியின சமுதாய மக்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் நிரந்தரமாக குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் அக்குடியிருப்புக்களுக்கு, அரசு சார்பில் வீட்டுவரி ரசீது, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, சாலைவசதி என அனைத்து வசதிகளையும் செய்து தந்துள்ளது.
இருப்பினும், அப்பகுதியில் நிரந்தரமாக குடியிருந்து வரும் அவர்களுக்கு, அரசு குடியிருப்பு மனைப்பட்டா வழங்காமல் பல ஆண்டு காலமாக அவர்களை அலைக்கழித்து வருவதாகவும், மேலும், அது தொடர்பாக அவ்வின மக்கள் மாவட்ட ஆட்சியரை பலமுறை நேரில் சந்தித்து மனு அளித்ததாகவும், ஆனால் அதுக்குறித்து எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லையெனவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுந்திரவிளாகம், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட பழங்குடியின சமுதாய குடும்பங்கள் கோரிக்கை மனுவினை கையிலேந்தியபடி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மீண்டும் கோரிக்கை மனு வழங்கிட திரண்டனர்.
ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அங்கிருந்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே அழைத்து சென்று குறைதீர்க்கும் நாள் முகாமில் கோரிக்கை மனுவினை அளித்து உடனடியாக பட்டா வழங்கிட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
பேட்டி: இடிமுரசு, நாடாளுமன்ற தொகுதி செயலாளர். விடுதலை சிறுத்தை கட்சி.