காஞ்சிபுரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கிய சாலையில் சிசிடிவி கண்காணிப்பு இருந்தும், சாதூர்யமாக இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் இளைஞன். சிசிடிவி பதிவு காட்சிகளை வைத்து இளைஞனை சிவகாஞ்சி போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம், செப் . 19 –
காஞ்சிபுரத்தில் முக்கிய சாலையாக விளங்கும் காமராஜர் சாலையில் தாலுகா அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சிவ காஞ்சி காவல் நிலையம், பேருந்து நிலையம், நகைக்கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாடும் சாலையாக இப்பகுதி உள்ளது.
இந் நிலையில் பிரபல நகைக்கடை, துணிக்கடை அமைந்துள்ள பகுதியில் உள்ள வாகன நிறுத்தத்தில் நின்றிருந்து நோட்டம் மிட்ட இளைஞன் ஒருவன், யாரும் கவனிக்காத நிலையில் வாகன நிறுத்துமிடத்திலிருந்து புத்தம் புதியதாக உள்ள இரு சக்கர வாகனத்தை சாதூர்யமாக திருடி சென்று உள்ளான்.
நகைக்கடை மற்றும் துணிக்கடையில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு இருந்தும் எவ்வித அச்சமுமின்றி வாகனத்தை திருடி சென்று இருப்பது அப் பகுதியில் வாகனத்தை நிறுத்தும் வாகன ஓட்டிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் குறித்து வாகன உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞனை தீவிரமாக தேடி வருகின்றனர்.