கும்பகோணம், ஆக. 24 –
கும்பகோணம் அருகே உள்ள கொத்தங்குடி திறந்தவெளி நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்து கருகி பயனற்ற முறையில் கிடக்கின்றன. அதனைக் கண்டு விவசாயிகள் வேதனையடைகின்றனர்.
முன்பட்ட குறுவை நெல்சாகுபடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கொத்தங்குடி கிராமத்தில் திறந்தவெளி நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கோடை காலத்தில் அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல் சாகுபடி நெல் மூட்டைகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு அந்த நெல் மூட்டைகள் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. அம்மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்து கருகி சேதம் ஏற்பட்டு பயன்படுத்த முடியாத வகையில் அவைகள் வீணாகி வருகிறது.
விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் போது, அரசு அலுவலர்கள் ஈரப்பதத்தை காரணம் காட்டியும், சாக்கு இல்லை, சணல் இல்லை, ஆள் இல்லை, மின்சாரம் இல்லை என்றவாறு பல்வேறு காரணங்கள் கூறியும் அலட்சிப்போக்குடனும் செயல்பட்டு விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட அந்த மூட்டைகளை திறந்தவெளி நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்குகளில் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் இன்று முறையான சேமிப்பு கிடங்கு கட்டிடம் இல்லாமல் மழையில் நனைந்தும் காய்ந்து கருகியும் சேதம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையினை கண்டு அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைகின்றனர். மேலும், அவர்கள் உடனடியாக சேதமடைந்த நெல் மூட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உரிய பாதுகாப்பான முறையில் கட்டிடத்தில் வைக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.