கும்பகோணம், மார்ச். 15 –
கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் அடுத்த கருப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் 435 மதிப்பெண் பெற்று மருத்துவபடிப்பிற்கு தேர்வாகிவுள்ளார். அவரின் முழு மருத்துவ படிப்பிற்கான செலவை அரசு தலைமை கொறடா ஏற்றுக் கொண்டார்.
கும்பகோணம் அருகே கடைக்கோடியணை பந்தநல்லூர் அடுத்த கருப்பூர் தோப்பு தெருவில் வசித்து வரும் கூலித்தொழிலாளி முருகன் இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் மேலும் இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது இளைய மகன் பாலாஜி பந்தநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.
அவரைப் பாராட்டி தஞ்சை மாவட்ட நிர்வாகம் கந்தர்வகோட்டை தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு 12ம் வகுப்பு படிப்பதற்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டது அவர் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றார். இதனைத் தொடர்ந்து மருத்துவம் படிக்க விரும்பிய அவர், பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு, 2021-ம் ஆண்டுக்கான நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 435 மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பிற்கு தேர்ச்சி பெற்றார்.
தொடர்ந்து நடைபெற்ற கலந்தாய்வில் மருத்துவம் படிக்க முடிவு செய்த பாலாஜிக்கு, நாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இருப்பினும் கல்லூரி சேர்க்கை, விடுதிக் கட்டணம் என ரூ.53 ஆயிரம் தேவைப்பட்டுள்ளது. போதிய வருமானம் இல்லாத நிலையில் கட்டணம் செலுத்த இயலாமல் மாணவன் தவித்து வந்தார். அவரது நிலை அறிந்து அரசு தலைமை கொறடா கோவி செழியன், கவனத்துக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து அரசு தலைமை கொறடா கோவி செழியன் மாணவன் இல்லத்திற்கு நேரில் சென்று மருத்துவம் படிக்கும் பாலாஜியின் கல்லூரி படிப்பு முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்து முதல் தவணையாக உதவித் தொகையை வழங்கினார். தொடர்ந்து அரசு தலைமை கொறடா கோவி செழியன் தெரிவித்தபோது
மத்திய அரசின் கொடுமையான நீட்தேர்வு எதிர்த்து சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் இரண்டு முறை நீட்டுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றியது திமுக அரசு இதை ஆளுநருக்கு ஒப்புதலுக்கு இரண்டு முறை அனுப்பி குடியரசுத் தலைவர் வரை வலியுறுத்தப்படுகிறது பாலாஜி போன்ற ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கனவு திட்டம் அதற்கு முழுமையாக தமிழகஅரசு கருத்தை ஏற்று மத்திய அரசு நீட் தேர்வு முழுமையாக ரத்து என்ற அறிவிப்பு வெளிவரும் வரை தமிழக அரசு தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பாலாஜிக்கு படிப்பு செலவிற்காக உதவிய ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் திருப்பனந்தாள் ஒன்றிய துணைத் தலைவர் கோ.க அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதே பகுதியில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவி பரணிகாவுக்கும் முழு செலவையும் அரசு தலைமை கொறடா ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



















