சென்னை:
சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் பள்ளியில் ரோட்டராக்ட் கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
‘தமிழகம் என்னும் குழந்தை தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதை யாரும் தட்டிக் கொடுக்கவும் இல்லை; கொஞ்சவும் இல்லை. ரத்தம் வந்தால் அதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும், உடனடியாக அறுவை சிகிச் சைக்காக செல்ல முடியாது. 44 பேர் இறந்துள்ளனர்.
உங்களது பெற்றோர் உங்களை ராணுவத்துக்குச் செல்ல வேண்டாம் என்றால், அவர்களிடம் சொல்லுங்கள், ராணுவத்தில் உயிரிழப்பவர்களைவிட தமிழகத்தில் சாலை விபத்தில் உயிர் இழப்பவர்கள்தான் அதிகம் என்று.
ராணுவ வீரர்கள் இறப்பதற்குதான் ராணுவத்துக்கு வருகிறார்கள் என்கிறார்கள். ராணுவ வீரர்கள் சாக வேண்டும் என்ற அவசியமில்லை. இரண்டு நாட்டின் தலைவர்களும் அமர்ந்து பேசினால், ராணுவ வீரர்கள் உயிரிழக்க வேண்டிய தில்லை.
இந்த ஒரு வருடத்தில் எதை எதை செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொண்டேன். அரசியலில் என்ன செய்யக்கூடாது என்பதை எனக்கு முன்பாக அரசியலில் உள்ளவர்கள் கற்றுக்கொடுத்தனர்.
பொதுஅறிவு கூட இல்லாதவர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள்.
கூட்டணி என்னும் கறுப்புக் குட்டைக்குள் எனது புது காலணியை அழுக்காக்க விரும்பவில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அது தமிழகத்தை பாதிக்கும். கட்சியைத் தொடங்கிவிட்டு தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொல்வது முறையல்ல.
கிராம சபைக் கூட்டம் என்று இருப்பது உங்களுக்குத் தெரியாதா. நேற்று வந்த பையனைப் பார்த்து காப்பி அடிக்க வெட்கமாக இல்லையா?’’.
இவ்வாறு அவர் பேசினார்.
கமல் கலந்துரையாடலுக்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி:- தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க காரணம் என்ன?
பதில்:- தி.மு.கவை கடுமையாக விமர்சிக்க, தி.மு.கவே காரணம், மறைமுகமாக அல்ல நேரடியாக விமர்சிப்பேன். கூட்டணியில் இடம்பெற முடியாத தால் தி.மு.கவை விமர்சிக்க வில்லை.
கே:- டி.டி.வி தினகரனுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வருகிறதே?
ப:- அந்த தகவல் உங்களுக்கு வேண்டுமானால் நல்ல தகவலாக இருக்கலாம். எனக்கு அல்ல.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.