கும்பகோணம், பிப். 21 –
தமிழ்நாட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் கடந்த 18 ஆம் தேதி சந்திரசேகர் மூப்பனார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை நீதியரசர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் கும்பகோணம், சென்னை, யு.எஸ்.ஏ. சிங்கப்பூர், ஐதராபாத், துபாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியில் நடனம் ஆடி விழாவினை சிறப்பித்தனர்.
மேலும், இதில் கலாஸிந்து பரத நாட்டிய பள்ளியின் இயக்குனர் ஸிந்து சியாம் முதல் நாள் நிகழ்ச்சியில் நடனம் ஆடினார்.
இந்நிகழ்ச்சியின் இறுதி நாளஆன நேற்று அதில் குச்சிப்புடி, கதக்களி உள்ளிட்ட பல்வேறு நடனங்களை கலைஞர்கள் ஆடி, வந்திருந்த பார்வையாளர்களை வியப்படையச் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து சிவபெருமானை பூஜிக்கும் பாடல்களுடன் சிறுமியர்களின் பரதநாட்டியமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இதில் ஏராளமான இசை ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.