கும்பகோணம், மே. 25 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவெள்ளியங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கோலவில்லி இராமர் திருக்கோவிலாகும், இத்திருக்கோயிலில் கடந்த 85 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று, வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அத்திருக்கோயிலில் கட்டு தேரோட்டம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவெள்ளியங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கோலவில்லி திருக்கோவிவாகும்.
மேலும் இத்திருக்கோயில், நவகிரகங்களில் சுக்கிரனாகிய வெள்ளி இத்தல பெருமானை தவமிருந்து வழிபட்டமையால் இந்த ஊர் வெள்ளியங்குடி என்ற பெயர் பெற்றதெனவும் மேலும் இவ்வூரினை சுக்ரபுரி எனவும் அழைக்கப்படுவதாக இத்தலவரலாறு தெரிவிக்கிறது.
மேலும் இத்திருக்கோவிலுக்கு வாமனனாக அவதாரம் எடுத்து வந்த திருமாலுக்கு, மூன்றடி மண் தானமளிக்க தயாரானார் மகாபலிச் சக்ரவர்த்தி எனவும், மேலும், திருமாலும் இராமபிரானாக அச்சக்கரவர்த்திக்கு காட்சியளித்தார் எனவும், பராசரன், மார்க்கண்டேயர், இந்திரன், பிரம்மா, பூமிதேவி ஆகியோரும் இப்புண்ணியத் தலத்தினை வழிப்பட்டதாகவும் இத்தலவரலாறு கூறுகிறது.
மேலும் இத்தலத்திற்று வருகை தந்து சுவாமியை 108 திவ்விய தேச க்ஷேத்திரங்களை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக போற்றி வரப்படுகிறது என அவ்வூர் மூத்த ஆன்மீகவாதிகள் தெரிவிக்கின்றனர்.
இத்தகுச்சிறப்பு மிக்க இத்தலத்தில் கடந்த 85 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோலவில்லி இராமர், தாயார் மரகதவல்லி, ஆண்டாள் கட்டு தேரில் எழுந்தருள, நாதஸ்வர மேள, தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, கருடாழ்வார் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, கொடி மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டு, கொடி மரத்திற்கும், பால், தயிர், மஞ்சள், சந்தனம், போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கும் நட்சத்திர தீப ஆர்த்தி செய்யப்பட்டது, இதில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், திருப்பனந்தாள் ஒன்றியம் துணை பெரும் தலைவர் கோ.க அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் உதயசந்திரன், மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி விழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான 5ம் நாள் திருவிழா வருகிற 19 ஆம் தேதி கருட வாகன ஓலைச்சப்பரம், 8ம் நாள் 22ம் தேதி திருக்கல்யாண உற்சவமும்,10ம் நாளான 24-ஆம் தேதியான திருத்தேர் சப்பரம், அதனை தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அலுவலர் பொறுப்பு கிருஷ்ணகுமார், மற்றும் உபயதாரர்கள், கிராம நாட்டாமைகள் பஞ்சாயத்துர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.























