காஞ்சிபுரம், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்து பொது மக்களுக்கு உடலை குளிர்ச்சியூட்டும் பழங்கள் , மோர் ஆகியவற்றை வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் கடந்த சில தினங்களாக 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாண்டி அனல் காற்று வீசி வருகிறது.
இந்நிலையில் பொதுமக்கள் தேவையின்றி ஒரு மணியிலிருந்து நான்கு மணி வரை வெளியே வர வேண்டாம் எனவும் மேலும் வெயில் நேரத்தில் அனைவரும் குளிர்ச்சியான பானங்கள், பழங்கள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும் என அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் கடந்த ஆண்டு முதலே கோடை காலங்களில் இலவச தண்ணீர் பந்தல் செயல்பட்டு வருகிறது.
அவ்வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே , கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் முன்பு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பழங்கள், மோர், குளிர்ந்த நீர் ஆகியவை வைக்கப் பட்டிருந்தது. மேலும் இந்நிகழ்ச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு பழங்கள் மற்றும் மோர் ஆகியவற்றை வழங்கி துவக்கி வைத்தார்.
கடும் கோடை நேரத்தில் பழங்கள் , மோர் வழங்கப்பட்டதால் சாலையில் சென்ற அனைத்து தரப்பினரும் அதனைப் பெற்று தங்கள் உடல் வெப்பத்தை குறைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.