கும்பகோணம், ஜூன். 25 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருப்பனந்தாளில் ஒரே நாளில் 8 திருக்கோயில்களில், பக்தர்கள் புடை சூழ மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
கும்பகோணம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் சுற்று வட்டார கிராமங்களில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட மட்டியூர் கிராமத்தில் உள்ள விநாயகர், அய்யனார், மாரியம்மன், காளியம்மன், மாணிக்க நாச்சியார், உள்ளிட்ட கோயில்களும் , மேலவழி பகுதியில் திரௌபதி அம்மன், ஸ்ரீ பூமி தேவி அம்மன் ,உள்ளிட்ட கோயில்களும் திருப்பனந்தாள் சன்னதி தெருவில் ஸ்ரீ வேம்பு முத்து மாரியம்மன் ஆலயங்களில் திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகம் செய்திட திட்டமிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, திருப்பணிகள் நிறைவுப்பெற்று, கடந்த 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகள் விக்னேஷ்வர பூஜை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை, கஜ பூஜை நடைபெற்று, காவிரியாற்றில் இருந்து கலசங்களில் புனிதநீர் கொண்டு வரப்பட்டு கும்ப அலங்காரத்துடன் யாகசாலை பிரவேசம் நடைபெற்று முதல்கால யாக பூஜைகள் தொடங்கியது, தொடர்ந்து 24 ஆம் தேதி சனிக்கிழமை இருவேளை யாகசாலை பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து இன்று 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 4ம் கால யாகசாலை பூஜை பூர்ணாஹதியுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டு, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, பூ மாரி பொழிய கடங்கள் புறப்பாடும் அதனை அடுத்து, ஒரே நேரத்தில் 8 ஆலயங்களில் மூலவர் விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் தருமபுர ஆதீனம் 27 வது மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திருமுன்னர், காசி திருமட அதிபர் ஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள், இளவரசு சபாபதி தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டனர். சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒரே நேரத்தில் 8 கோயில்களில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடந்ததால் திருப்பனந்தாள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வருகையால் திருப்பனந்தாளி ஆன்மீக பூமியாக திகழ்ந்தது.























