திருவாரூர், நவ. 23 –

கொடிக்கால்பாளையம் பள்ளிவாசலில் தொன்றுத் தொட்டு கொண்டாடப்பட்டு வரும் பாச்சோறு எனும் சர்க்கரை பொங்கல் திருவிழா நடைப்பெற்றது. அதில் 250க்கும் மேற்பட்ட பாத்திரங்களில் சர்க்கரை பொங்கலிட்டு பாத்தியா ஓதி வழிபாடு செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கொடிக்கால்பாளையம் பகுதியில் பழமையான முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது.  இப்பள்ளிவாசலில் செய்யது மசூம் சாஹிப் ஒலியுல்லா என்ற மகான் தங்கி பல்வேறு அற்புதங்களை நடத்தியதோடு, இஸ்லாமியர்களுக்கு மட்டுமன்றி  அனைத்து மதத்தினருக்கும் ஆசி வழங்கி அருள்பாலித்து வந்துள்ளார் என அத்தல வரலாறு தெரிவிக்கிறது.

மேலும் அப்பள்ளி வாசலில் தங்கி அருள்பாலித்து வந்த முகைதீன் ஆண்டவருக்கு அப்பள்ளிவாசலில் நினைவிடமாக அமைக்கப்பட்டு அங்கு இஸ்லாமியர்கள் வழிபட்டு வருவதோடு, மகான் செய்யது மசூம் சாஹிப் ஒலியுல்லா அடக்கமான நாளை பாச்சோறு திருவிழாவாகவும் அனுஷ்டித்து வருகின்றனர்.

அதன்படி அந்நாளில், பாச்சோறு திருவிழா என்பது 5 படி வெள்ளம், 5 கிலோ பச்சரிசி, 5 தேங்காய் என்ற எண்ணிக்கையில் சர்க்கரை பொங்கலை தயார் செய்து அதனை மகான் அடக்கமான நாளில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் உள்ள அவரது நினைவிடத்திற்கு கொண்டு வந்து சிறப்பு துவா செய்து பின்னர் அதனை அனைவருக்கும் பிரதாசமாக வழங்குவது வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

மேலும் இவ்விழாவின் சிறப்பு அம்சமாக, இன்று ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மகான் செய்து மசூம் சாஹிப் ஒலியுல்லா அடக்கமான இந்நாளில் அவரது நினைவிடத்தில் நூற்றுக்கணக்கான பாத்திரங்களில் பாச்சோறு எனும் சர்க்கரை பொங்கலை செய்து வைத்து சிறப்பு துவா ஓதி வழிபட்டனர்.  பின்னர் மகான் நினைவிடத்தில் ஒவ்வொருவரும் தங்களது திருகரங்களால் சந்தனம் பூசி வழிபட்டனர்.

இம்மகானிடம் தாங்கள் நினைத்த காரியம் வெற்றியடைய வேண்டி பிராத்தனை மேற்கொண்டவர்கள் நேர்த்திகடன் செலுத்தும் விதமாக பாச்சோறு பெருநாளில் கலந்துகொண்டு நேர்த்தி கடனை செலுத்துகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here