கும்பகோணம், செப். 23 –
கும்பகோணத்தில் தமிழக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் அமைந்துள்ள சந்திரசேகராபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை அங்காடியை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின் அவர் தெரிவிக்கையில் தனியார் துறைக்கு முன்பாகவே 1970 முதல் இந்த சந்திரசேகரபுரம் மொத்த விற்பனை அங்காடி செயல்பட்டு வருவதாகவும், தனியார் நிறுவனத்தை விட தரமான பொருட்களை குறைந்த விலைக்கு இந்நிறுவனம் வழங்குவதாகவும், அதுப் போன்று மருந்து மாத்திரைகள் 20 சதவீதம் விழுக்காடு குறைந்த விலையில் இங்கு கிடைப்பதாகவும், மேலும் குறிப்பிட்ட ஒரு சில மருந்துகள் மிக மிக குறைந்த விலைக்கு கிடைப்பதாகவும், மேலும் இச்சங்கத்தின் செயல்பாடுகள் மிக சிறப்பாக உள்ளதாகவும் பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து, சுயஉதவி குழுக்களால் சுவாமிமலை பகுதிகளில் செய்யப்படும் சிலை போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு விற்பனை மையம் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், தீபாவளிக்கு முன்பாகவே ஆன்லைனில் விற்பனையை தொடங்க இருப்பதாகவும், வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்கும் திட்டத்தையும் தொடங்க இருப்பதாகவும் அப்போது தெரிவித்தார். மேலும் இதில் சிறப்பாக பணியாற்றி வரும் பணியாளர்களையும் பாராட்டினார்.
இந்நிலையில் வேளாண்மைக்கு கடந்த ஆண்டு ரூ. 10, 892 கோடி அளவிற்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 14 லட்சத்து 84 ஆயிரத்து 52 விவசாயிகள் பயன் பெற்றுள்ளதாகவும், இந்த ஆண்டு இதைவிட கூடுதலாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.