கும்பகோணம், செப். 23 –
கும்பகோணத்தில் இன்று தனியார் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இயற்கை திருவிழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில் திரளானவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் விழா சிற்ப்பாக நடைப்பெற்று முடிவடையும் வேளையில், அவ்வாளகத்திற்குள் இருந்த அரசமரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் அதிலிருந்து பறந்து வந்து அவ்விழாவில் பங்கேற்ற பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், செய்தியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என 20 க்கும் மேற்பட்டவர்களை கடித்ததால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கும்பகோணத்தில் எஸ்.ஆர்.வி.எஸ். எனும் தனியார் நிறுவனத்தில் இன்று நடைபெற்ற இயற்கை திருவிழாவில், குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் பாரம்பரிய மரபு ரீதியிலான ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது .
இந்நிகழ்வில் முத்தையாப்பிள்ளை மண்டபம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடங்கப்பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விழாவில் பங்கேற்றனர்.
இந்நிலையில் விழா நிறைவு பெறும் சமயத்தில், அனைவருக்கும் சத்தான இயற்கை உணவுகள் தேங்காய் அவுல் சர்க்கரை, அவுல் பொங்கல், சீரக நீர், பானகம், வெட்டிவேர் நீர் ஆகியவை வழங்கப்பட்டது,
அப்போது விழா நடைபெறும் இடத்திற்கு அருகில் இருந்த அரச மரத்தில் இரு இடங்களில் கதண்டு கூடு கட்டியதில் இருந்த கதண்டுகள் திடீரென பறந்து வந்து விழாவில் கலந்து கொண்டவர்களை சூழ்ந்து கொண்டு கொட்ட தொடங்கியது, இதில் இருந்து தப்பிக்க விழாவில் பங்கேற்ற அனைவரும், அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். இருப்பினும் அவர்களை விடாமல் சுமார் அரை கி.மீ தூரம் வரை துரத்தி வந்து கொட்டியது.
இதில் பள்ளி குழந்தைகள் 12 பேர், அவர்களுடன் வந்த ஆசிரியர் 2 பேர், தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் 3 பேர் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் 3 பேர் என மொத்தம் 20 பேர் காயமுற்றனர் அவர்கள் அனைவரும் உடனடியாக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு அங்கு அவர்கள் அனைவருக்கும் முதற்கட்டமாக ஊசி போட்டப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அசம்பாவிதத்தால் அப்குதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.





















