சென்னை, ஜன. 3 –

15 முதல் 18 வயது வரை இருக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைப்பெற்றது. அதனை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்பு மக்களுக்கு பல்வேறு வேண்டுகளை விடுத்து உரையாற்றினார்.

அவ்வுரையில் பின்வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஜனவரி 1-ஆம் நாள் மக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு  வாழ்த்துகளை சொல்ல வேண்டும் என்பதற்காக நானே பேசி, அதை பதிவு செய்து, எல்லா  தொலைக் காட்சிகளிலும் வெளியிடப் பட்டிருக்கிறது, சமூக வலைத்தலங்களிலும் அது தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, அதை பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். நான் புத்தாண்டு வாழ்த்துகளை மட்டும் சொல்லவில்லை, அதில் ஒரு வேண்டுகோளையும் எடுத்து வைத்திருக்கிறேன். ஒமைக்ரான் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க  வேண்டியதன் அவசியத்தையும் நான் அதில் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான்,   இன்றைய நாள் – மூன்று முக்கியச் செய்திகளை உங்களுக்கு நான் சொல்லப் போகிறேன். 

     ஒன்று, ஓமைக்ரான் வைரஸ் டெல்டா வைரஸிலிருந்து உருமாறி இருந்தாலும் – முந்தைய வைரசைவிட இந்த புதிய வைரஸின் நோய்தாக்கத் தன்மை குறைவு என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அது ஒரு ஆறுதல் அளிக்கக்கூடிய செய்திதான்.   ஆனால் – முந்தைய வைரஸை விட பல மடங்கு வேகமாக பரவக் கூடியது இந்த ஒமைக்ரான் என்ற தொற்று. அதனால்தான், இதில் நாம்  கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையாக உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், இதில் பரவல் வேகம் அதிகம் – நோயின் தாக்கம் தமிழகத்தில் நிச்சயமாக அதிகரிக்கக்கூடும். ஆனால், இதைத் தடுப்பதற்காக நமக்கு முன்னால் இருக்கக்கூடிய கேடயம் என்னவென்றால், முகக்கவசம் தான். இதுதான் அதைத் தடுக்கிற ஒரு முக்கியமான கேடயமாக இருக்கிறது.

     கட்டாயம் முகக்கவசத்தை அணிய வேண்டும். குறிப்பாக, பொது இடங்களில் நீங்கள் செல்கின்ற போது, கூட்டம் இருக்கும் இடங்களுக்குச் செல்லும்போது, நிச்சயமாக  இந்த முகக்கவசத்தை அணிந்தே தீர வேண்டும். அதுமட்டுமல்லாமல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தாக வேண்டும். அதுதான் என்னுடைய முக்கியச் செய்தியாக நான் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தேன்.  

     அடுத்து, ஒமைக்ரான் வைரஸ் உருமாறி இருந்தாலும், நம் நாட்டில் செலுத்தப்படும் தடுப்பூசிகள் நல்ல நோய்த் தடுப்பை தொடர்ந்து அளித்து வருகிறது. தடுப்பூசியால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியால் புதிய வைரஸ் தாக்கினால் கூட, அந்த நோயின் தாக்கம் குறைவாகத்தான் இருக்கும். அதோடு, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் இறப்பு விகிதமும் மிக மிக குறைவு என்பதைத்தான் மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். ஆகவே, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் – உயிர் காக்கும் தடுப்பூசியை ஒவ்வொருவரும் போட்டுக் கொள்ள வேண்டும்.

     அமெரிக்காவில் தினமும் 5 லட்சம் பேர் ஒமைக்ரான் என்ற தொற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.       ஐரோப்பா போன்ற வளர்ச்சி அடைந்திருக்கக்கூடிய நாடுகளிலேயே புதிய வைரஸின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது.

     இந்தியாவில் அந்த அளவிற்கு இல்லை என்றாலும், இப்போது நோய்த் தொற்று கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. நம் அண்டை மாநிலங்களான, கேரளாவிலும் தொற்று அதிகரித்து வருகிறது.

     மஹாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள் – 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  கொரோனா வைரஸ் தொற்று தாக்கப்பட்டு, அவர்கள் சிகிச்சையில் இருக்கிறார்கள் என்ற செய்தியும் வந்துகொண்டிருக்கிறது. ஆகவே, தமிழ்நாட்டிலும் தொற்று அதிகரிக்கும் சூழலில்- தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ஆகவேதான், நமது அரசு தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஒரு இயக்கமாக மாற்றியிருக்கிறது. ஆகவே மக்களாகிய நீங்கள் அந்த இயக்கத்தில் இணைந்து, கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இது எனது இரண்டாவது செய்தி.

     இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் – 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் – இன்னும் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொள்ளாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நிச்சயம் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட வேண்டும் என்று நான் உங்களை அன்புடன், பணிவோடு, உரிமையோடு, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களில் ஒருவனாக கெஞ்சி, மன்றாடிக்  கேட்டுக் கொள்கிறேன். இது நான் விடுக்கக்கூடிய மூன்றாவது செய்தி.

     ஆகவே முதலமைச்சர் என்கிற முறையில் மட்டுமின்றி – உங்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்து உங்களை அன்போடு மீண்டும், மீண்டும் நான் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

பொது இடங்களில் நிச்சயமாக, உறுதியாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ளுங்கள். அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடியுங்கள். நம் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நீங்கள் தரவேண்டும்.     

     தடுப்பூசி போட்டுக் கொள்வோம் – புதிய வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்துவோம் என்ற உறுதியை நீங்கள் இந்த நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று  மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.

     எல்லாவற்றிலும் முதல் இடம் என்று மாண்புமிகு அமைச்சர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, வரக்கூடிய காலக்கட்டத்தில் இந்த தொற்று நோயிலிருந்து விடுபட்டிருக்கக்கூடிய மாநிலம் நம்முடைய தமிழ்நாடு என்ற பெயரை நாம் எடுத்தாக வேண்டும். அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு நிச்சயமாக தேவைப்படும். அரசு நினைத்தால் அது வெற்றி பெற வைத்துவிட முடியாது. அரசோடு, பொதுமக்களாக இருக்கக்கூடிய நீங்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். ஒரு கையால் தட்டமுடியாது, இரண்டு கைகளால் தான் தட்டமுடியும். ஆகவே, நீங்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

திட்ட விளக்கவுரை ஆற்றி அமர்ந்திருக்கக்கூடிய  இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் கணபதி, பிரபாகர ராஜா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., சென்னை மாநகராட்சி துணை ஆணையர்கள், டாக்டர் மனிஷ் ஷங்கர்ராவ், இ.ஆ.ப., திருமதி சினேகா, இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் மருத்துவத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய அரசு அதிகாரிகள், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here