சென்னை, ஜூலை 31 –
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைப்பெற்றது .
இக்கூட்டத்தில் பல்வேறு பணிகளின் முன்னேற்றம் புதிதாகத் திட்டமிட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உத்தேசிக்கப் பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை குறித்த ஆய்வு செய்யப்பட்டது.
நிதித்துறையின் கீழ் செயல்படும் துறைகளான கருவூலம் மற்றும் கணக்குகள், ஒய்வூதியம், உள்ளாட்சி நிதித் தணிக்கை, கூட்டுறவுத் தணிக்கை, துறைத்தணிக்கை மற்றும் நிறுவனத் தணிக்கை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம் மற்றும் சிறு சேமிப்பு ஆகிய துறைகளின் செயல்பாடுகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட நன்கொடைகள் அவை செலவிடப்பட்ட விவரங்கள் குறித்து ஆய்வு மேற் கொண்ட முதலமைச்சர் பொது நிவராண நிதிக்கு இணையதளம் வாயிலாக நன்கொடைகள் பெறும் வசதியின் தற்போதைய நிலை குறித்தும், 8.5.2021 முதல் 28.7.2021 வரை ரூபாய் 500 கோடிக்கும் அதிகமாக நன்கொடைப் பெறப்பட்டு ரூபாய் 305 கோடிக்கு கொரோனா நோய்த்தொற்றுத் தொடர்பான பணிகளுக்கு செலவிடப்பட்ட விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற் கொண்டார். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் செயல்பாட்டு நிலை, பயன்பெற்று வரும் பயனாளிகளின் விவரங்கள், சார்நிலைக் கருவூலங்களின் செயல்பாடுகள் ஆகியவைக் குறித்தும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்தார்.
தணிக்கை முறைகளை வலுப்படுத்தி தணிக்கை தடைகள் எழாத வண்ணம் சிறந்த நிருவாகத்தை ஏற்படுத்தவும், நிலுவையில் உள்ள தணிக்கைப் பத்திகளின் தற்போதை நிலையினைக் கண்காணித்திடவும் அறிவுறுத்தினார். அரசின் வரவு செலவு திட்ட நடவடிக்கைகளில் மற்றம் வரவு செலவுத் திட்டம் தயாரிப்பதில் நவீன வழிமுறைகளைக் கையாளுதல், எளிய மற்றும் பேச்சு வழக்கு மொழியில் குடிமக்களுக்கான வரவு செலவுத் திட்டத்தை வெளியிடுதல் போன்ற புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற் கொண்டார். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக கேட்டறிந்த முதலமைச்சர் ஓய்வூதியர்களின் குறைகளை விரைந்து களைய நடவடிக்கை எடுக்கமாறு அறிவுறுத்தினார். மேலும் தமிழ்நாடு உள் கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்இதன் மூலம் நிர்வகிக்கப் படும் திட்டத் தயாரிப்பு நிதியின் கீழ் செயல்படுத்தப் பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலைக் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் நிதி மற்றம் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச்செயலாளர் ச.கிருஷ்ணன், கருவூலக் கணக்குத்துறை ஆணையர் டி.என்.வெங்கடேஷ், நிதித்துறை சிறப்புச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தாக்கர், நிதித்துறைக் கூடுதல் செயலாளர் பிரசாந்த் எம். வடநேரே, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.