ராமநாதபுரம்
அதிமுக, பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேனி, ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி நாளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஆயிர கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக நாளை காலை 10.15 மணிக்கு மதுரையிலிருந்து ஹெலிகாப்டரில் தேனிக்கு சென்று அங்கு நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பின் தேனியிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக காலை 11.50 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஹெலிபேடில் இறங்கி தனி கார் மூலம் டி பிளாக் பகுதியில் அமைந்துள்ள பிரச்சார கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார்.
அங்கு ராமநாதபுரம் லோக்சபா தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் பரமக்குடி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து பகல் 1 மணிக்கு பேசுகிறார். பிற்பகல் 1.50 மணிக்கு ஹெலிகாப்டம் மூலம் மதுரை வந்து அங்கிருந்து தனி விமானத்தில் கர்நாடகா மங்களூரு செல்கிறார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மதுரை, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.