சென்னை, டிச. 09 –
தமிழ்நாட்டில் கடந்த டிச 3 ஆம் தேதி முதல் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் புயல் காற்றால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி மக்களின் இயல்பு நிலை மிகவும் பாதிப்புக்குள்ளானது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டு பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்ததின் பேரில், மாவட்டத்தின் பலப் பகுதிகளில் தேங்கியிருந்த மழை வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளையும், மேலும் மின்சாரப் பாதிப்பு, மற்றும் புயல்காற்றால் சாலைகளில் விழுந்திருந்த மரம் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தல், மருத்துவமுகாம் அமைத்து சிகிச்சை வழங்கல், மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்தது.
அதனால் ஒரளவு மக்களின் இயல்பு நிலை திரும்பி வந்துக் கொண்டிருக்கும் நிலையில் பாதிப்புக்குள்ளான மக்கள் முழுமையாக பாதிப்பில் இருந்து வெளி வர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் சில தினங்களுக்கு முன்பு தனது ஒருமாத சட்டமன்ற உறுப்பினர் சம்பளத் தொகையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி, மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒருமாத சம்பளத்தை மிக்ஜாம் புயல் வெள்ளப் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிடும் படி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சார்ந்த தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்கள் இன்று ரூ.4.10 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார்கள்.
இன்று தலைமை செயலகத்தில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் வேணு அகர்வால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவராணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 3 கோடிக்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்வின் போது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்பி. ராஜா, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பெரு நிறுவன சமூக பொறுப்பு தலைவர் (சி.எஸ்.ஆர்) என்.வி.பாலசந்தர், துணைத்தலைவர் டி.சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, பி.எஸ்.ஜி குழுமத்தின் லீப் கிரின் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜீவ் கார்த்திகேயன் மற்றும் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவர் தேவ் ஆனந்த் ஆகியோர் முதலமைச்சரிடம் ரூ. 1 கோடிக்கான காசலோயை வழங்கினார்கள்.
முன்னதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் விசிக வின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பஇனர்களின் ஒருமாத சம்பளத் தொகையான ரூ.10 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினார். அப்போது விசிக வின் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, எம்.பாபு மற்றும் அக் கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.























