கும்பகோணம், டிச. 09 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா முன்னிட்டு 11 நாட்கள் விழா நடைப்பெறுவது வழக்கமாகும். அதன் ஒரு பகுதியாக இன்று நடைப்பெற்ற திருத்தேரோட்டத்தில் திரளான பெண்கள் உட்பட பக்தர்கள் திருத்தேரின் வடம் பிடித்து இழுக்க வெகுச்சிறப்பாக தேரோட்டம் நடைப்பெற்றது.
கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் இராகுவிற்குரிய ஸ்தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தை திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டு வந்தனர் என அத் தல வரலாறு கூறுகிறது.
மேலும் இத்தலத்தில் குன்றுமுலைக்குமரிக்கு (ஸ்ரீகிரிகுஜாம்பிகை) இருபுறமும் திருமகள், கலைமகள், வீற்றிருந்;து பணி செய்ய ஸ்ரீ சக்கரபீடத்தில் மத்தியில் நின்று கடும்; தவம் புரிந்து இறைவனின் வாமபாகத்தை பெற்று தனிக்கோயில் கொண்டுள்ளார்.
இத்தலத்தில் ஸ்ரீராகுபகவான் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி என்ற இரு மனைவியருடன் மங்களராகுவாக அருள்பாலிக்கிறார் இவருக்கு பால் அபிஷேகம் செய்வித்தால் ராகுதோஷம் நீங்கும் இத்தலத்தில் ராகுபகவான் மஹா சிவராத்திரி நன்னாளில் 2ம் காலத்தில் ஸ்ரீ நாகநாத சுவாமியை வழிப்பட்டு சுசீல முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்றார்
இத்தகு பெருமை வாய்ந்த இத்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்கள் சாமி வீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வுக்கான 7ம் நாளான திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான இன்று உற்சவர் நாகநாதசுவாமி, கிரிகுஜாம்பிகை, சிறப்பு மலர் அலங்காரத்தில் தேரில் எழந்தருள
திருத்தேரோட்டமும் சிறப்பாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் உமாதேவி, மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். நிகழ்ச்சியின் தொடர்ந்து 10ம் நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை மல்லாரி இசை திருவிழா அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் திருக்கோவிலின் சூரிய புஷ்கரணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் ஒருசேர எழுந்தருள கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுகிறது. பிறகு 11ம் நாளான 11ம் தேதி திங்கட்கிழமை விடையாற்றி உற்சவத்துடன் இவ்வாண்டிற்காண கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா நிறைவு பெறுகிறது.





















