புதுதில்லி, ஜன. 23 –

ஜம்மு காஷ்மீரில் உள்ள தமது மக்களவை தொகுதியான உதம்பூர்-கத்துவா-தோதாவை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் பெருந்தொற்று நிலவரம் உள்ளிட்டவற்றை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா பெருந்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் வார இறுதி ஊரடங்கு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு காணொலி மூலம் இந்த ஆய்வுக் கூட்டத்தை அவர் இன்று நடத்தினார்.

தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காக மாவட்டங்களில் தகவல் பலகை முறையின் செயல்பாடு குறித்து கேட்டறிந்த டாக்டர் ஜிதேந்திர சிங், கொரோனா பாதிப்புகளை கையாள்வது குறித்த புதிய அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார்.

மூன்றாவது அலையை பொறுத்தவரை பெரும்பாலான நோயாளிகளுக்கு அறிகுறிகளே இல்லாமலும் அல்லது குறைந்த அளவிலான அறிகுறிகளே இருப்பதாகவும், நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு பிறகு அவையும் குறைந்து விடுவதாகவும் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதிலும் மெத்தனமாக இருந்து விடக்கூடாது என்று வலியுறுத்திய அமைச்சர், கொரோனா தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று கூறினார். தமது தொகுதியில் உள்ள ஒருசில தொலைதூர இடங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தடுப்பூசி வழங்கலை வெற்றிகரமாக முடித்துள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here