கும்பகோணம், ஆக. 14 –
நாளை நம் நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திரதின பவள விழா கொண்டாட உள்ள நிலையில், அதனை முன்னிட்டு, திருநாகேஸ்வரத்தை சேர்ந்த பார்த்தசாரதி (59) என்ற முதியவர் கையில் தேசிய கொடி ஏந்தியபடி, சைக்கிளைப் பிடிக்காமலேயே ஒரு மணி நேரத்தில் 20 கி.மீ தூரம் பயணம் செய்து இன்று புதிய சாதனை படைத்துள்ளார்.
அவருக்கு ரியல் வேர்ல்டு ரெக்காட்ஸ் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட சான்றிதழை, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன் முன்னிலையில், தஞ்சை இராமகிருஷ்ணா மடத்தின் அத்யூர் சுவாமி விமூர்த்தா னந்தர், விவேகானந்தர் படத்தையும் பரிசளித்து பாராட்டி மகிழ்ந்தார்.
இப் புதிய சாதனையை படைத்த முதியவர் பார்த்தசாரதி, கும்பகோணம் திருநாகேஸ்வரம் வடக்கு வீதியை சேர்ந்தவர். இவருக்கு இரு கைகளையும் விட்டு விட்டு, நீண்ட தூரம் சைக்கிளில் பயணிக்க வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார், இவரது ஆர்வத்தை தெரிந்து கொண்ட கும்பகோணம் கராத்தே மாஸ்டர் செந்தில், அவருக்கு சுமார் ஒரு மாத காலம் பிரத்யோக பயிற்சி அளித்தார்.
இந்நிலையில் அவரின் ஆசையை நிறேவேற்றும் விதமாக நம் நாட்டின் 75 வது ஆண்டு பவளவிழா சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, இன்று தனது சாதனை நிகழ்த்திட முடிவு செய்து எஸ் புதூர் கிராமத்தில் இருந்து கும்பகோணம் வரை பார்த்தசாரதி, கைகளை பிடிக்காமலேயே சைக்கிள் ஓட்டி வந்தடைந்தார்.
மேலும், கும்பகோணம் வந்தடைந்த அவர் மகாமக குளக்கரையை 7 சுற்றுக்கள் வலம் வந்தார். பிறகு விவேகானந்தர் 125 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலுக்கு வந்து உரை நிகழ்த்தியதை நினைவுபடுத்தும் வகையில் அங்கு நாளை திறக்கப்படவுள்ள விவேகானந்தர் சிலை அமைவிடத்தில் தனது சாதனை பயணத்தை நிறைவு செய்தார்.


















