கோவிந்தபுரம், சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ….
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலுக்கு, நேற்று தருமை ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வருகைப்புரிந்தார். அவருக்கு கோயில் ஸ்தாபகர் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் தலைமையில் வேத பாடசாலை மாணவர்கள் பஜனை பாடல்கள் பாடியும், பூரணக் கும்ப மரியாதையுடன், மேளம்தாளம் முழங்க சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பசுக்கள் உள்ள கோ சாலையில் பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்கி ஆதீனம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தானத்தில் ராமர் சீதை அலங்காரத்தில் சேவை சாதித்த மூலவர் சன்னதியில் தருமை ஆதீனம் பூஜா மூர்த்தியான சொக்கநாத பெருமாளுக்கும், ருக்மணி தாயாருக்கு சிறப்பு மகா தீபாரதனை செய்து வழிபாடு செய்தார்.
பின்னர் நிருபர்களுக்கு தருமை ஆதீனம் அளித்த பேட்டியில் கூறியதாவது, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் பலரின் தவத்தால் இன்று திறப்பு விழா கண்டுள்ளது. அயோத்தி ராமர் கோயிலுக்கு அடுத்த மாதம் செல்வதாக தெரிவித்தார்.
மேலும், மதுராவில் கோயில் கட்ட வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். என்ற கேள்விக்கு நாம் யாரையும் வன்முறையாக கேட்கவில்லை. தொல்லியல் துறையின் கள ஆய்வு மூலமாக வெற்றி பெற்று, நீதிமன்றம் மூலமாக வெற்றி பெற்று அதன் பிறகு தான் கோயிலை கட்ட ஆரம்பித்தார்கள். நம்முடைய சமயம் என்றைக்குமே வன்முறைகளை சொல்லவில்லை. அதனால் நமக்கு அறவழியில் எந்த வாய்ப்பு இருக்கிறதோ அந்த வழியில் மென்மையாக சென்று அதனை செய்யக் கூடிய தன்மை இருக்கிறது என்றார். இந்நிகழ்வின்போது, ஏராளமான பக்தர்கள் ஆதீனங்கள், கோவிந்தபுரம் சமஸ்தான நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஆதீனத்துடன் இருந்தனர்.






















