திருத்துறைப்பூண்டி, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி…
இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரால் 2006 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு பாரம்பரிய நெல் மீட்பாளர் ஐயா நெல் ஜெயராமன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்ற உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வர்த்தகர் சங்க கட்டிடத்தில் இன்று நடைபெற்றது.
அக்கூட்டத்திற்கு பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய உயர்மட்டக்குழு தலைவர் பந்தநல்லூர் அசோகன் தலைமை வகித்தார். புதுச்சேரி இயற்கை விவசாயிகள் மற்றும் பலபயிர் சாகுபடி சங்க தலைவர் ராஜ வேணுகோபால், காரைக்கால் முத்துகிருஷ்ணன் , நன்னிலம் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் அனைவரையும் வரவேற்று நெல் திருவிழா குறித்து கூறியதாவது நெல் ஜெயராமன் கனவை நிறைவேற்றும் விதமாக தொடர்ந்து முன்னோடி விவசாயிகள் ஒத்துழைப்புடன் நெல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அதுப்போன்று இவ்வாண்டும் வருகின்ற ஜூன் 22 ம் தேதி சனிக்கிழமை திருத்துறைப்பூண்டியில் ஸ்ரீ கிருஷ்ணா திருமண அரங்கில் உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழாவை வெகு விமரிசையாக நடத்த தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதி முன்னோடி இயற்கை விவசாயிகள் ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் இவ்வாண்டு நெல் திருவிழாவில் இளம் இயற்கை விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும் , வேளாண் சார்ந்த தொழில் முனைவோர்களை உருவாக்கும் விதத்திலும் நெல் திருவிழா கட்டமைக்கப்படவும், அழிவின் விளிம்பு நிலையிலுள்ள பாரம்பரிய நெல் ரகங்கள் 5000 உழவர்களுக்கு வழங்கவும், 200 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை காட்சிப்படுத்தவும் அக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன்,பாரதமாதா நிறுவனங்களின் தலைவர் எடையூர் மணிமாறன், பாலம் செந்தில் குமார், கொறுக்கை ஜானகிராமன், குடவாசல் குணசீலன், மின் அமைப்பாளர் சங்க தலைவர் திருத்துறைப்பூண்டி கண்ணன், காட்டுயாணம் கரிகாலன், ஓவரூர் பரமசிவம், சர்வாலயா முருகன் என 50க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். அக்கூட்டத்தின் நிறைவில் கள ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நன்றிவுரை நிகழ்த்தினார்.






















