குத்தாலம், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் குளத்தில் நீராடினால் சரும நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
மேலும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடல் பெற்ற தேவாரத் தலமாக திகழ்கிறது என அத்தல வரலாறு தெரிவிக்கிறது. மேலும் இக்கோவில் சித்திரை பெருவிழா கடந்த 14 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினம்தோறும் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி திருவீதியுலா காட்சி நடைபெற்று வருகிறது,
மேலும் அதன் ஒன்பதாம் நாளான இன்று அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சாமி சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள சிறப்பு பூஜைகள்,மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து தேரினை வடம் பிடித்து இழுக்க நான்கு மாட வீதிகளையும் வளம் வந்த தேர் நிலையை அடைந்தது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.