கும்மிடிப்பூண்டி, ஏப். 25 –

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மன்றத்தில் உறுப்பினர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, திடீரென நரிக்குறவரின மக்கள் தங்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன, இந்த நிலையில் 11 வது வார்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 60 நரிக்குறவர் இன குடும்பத்தினர் அரசுக்கு சொந்தமான இடத்தில் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவை வழங்கப்பட்டுள்ள போதிலும் வீட்டு மனை பட்டா வழங்கப்படாததால் இவர்களுக்கு தேவையான குடிநீர், பொது கழிப்பிட வசதி, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துத் தர பேரூராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட நரிக்குறவ்வரின மக்கள் இதுக் குறித்து வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டதால் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து பரிசீலனை செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் பேரூராட்சி அதிகாரிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் பேரூராட்சி நிர்வாகம் அந்த இடம் தனி நபர் ஒருவருக்கு சொந்தமானது என கூறி அடிப்படை வசதிகளை செய்து தர தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதுகுறித்து பாமக வார்டு உறுப்பினர் ஜோதி இளஞ்செல்வன் கடந்த மாதம் நடைபெற்ற பேரூராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்து பாதிக்கப்பட்ட நரிக்குறவரின மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருமாறு கோரிக்கை விடுத்தார். அதன் பின்பும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதை அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவரின மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, குடிநீர், பொது கழிப்பிடம், சாலை வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதுக் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதாக அளித்த உறுதியை ஏற்றுக்கொண்ட நரிக்குறவரின மக்கள் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்டமாக பேரூராட்சி அலுவலகத்திற்குள் குடியேறும் போராட்டம் நடத்த போவதாகவும் எச்சரித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here