பெரும்பாண்டி, ஜன. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பெரும்பாண்டி ஊராட்சியில், அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்த்திட உதவிடும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்ட சிறப்பு முகாம் கடந்த டிச 30 ஆம் தேதியன்று நடைபெற்றது.
முன்னதாக மக்களுடன் முதல்வர் என்ற புதிய சிறப்புத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் கோவையில் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக பெரும்பாண்டி ஊராட்சி சார்பில் அவ் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஆர். கே பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் அச்சிறப்பு திட்ட முகாமில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்தார். அதில் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், சிவகுமார், ஒன்றிய பெருந்தலைவர் காயத்திரி அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சுதாகர், மண்டல குழு தலைவர் ஆசைத்தம்பி, மாவட்ட பிரதிநிதி கரிகாலன், மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அம்முகாமில், பெரும்பாண்டி சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.
அம்முகாமில் மக்கள் அடிக்கடி அணுகுகின்ற துறைகளான, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித்துறை,நகராட்சி நிர்வாகத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, கூட்டுறவு துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை, எரிசக்தித் துறை, மின்சாரத்துறை, ஆகிய 13 அரசுத் துறைகள் கலந்து கொண்டனர். இதில் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, உள்ளிட்ட 200க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.