கும்பகோணம், ஆக. 12 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவெள்ளியங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகோலவில்லி திருக்கோயிலில், நவகிரகங்களில் சுக்கிரனாகிய வெள்ளி இத்தல பெருமானை தவமிருந்து வழிபட்டமையால் இந்த ஊர் வெள்ளியங்குடி என்ற பெயர் பெற்றதாக இத்திருத்தல வரலாறு தெரிவிக்கிறது.
மேலும் சுக்ரபுரி என்றும் அழைப்பர். வாமனனாக அவதாரம் எடுத்து வந்த திருமாலுக்கு மூன்றடி மண் தானமளிக்க தயாரானார் மகாபலிச் சக்ரவர்த்தி. திருமாலும் இராமபிரானாக காட்சி தந்தார். பராசரன், மார்க்கண்டேயர், இந்திரன், பிரம்மா, பூமிதேவி ஆகியோர் வழிபட்ட புண்னிய தலமாகவும், மேலும் இத்தலத்தை தரிசித்தால் 108 திவ்விய தேச க்ஷேத்திரங்களை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் எனவும் தல வரலாறு கூறுகிறது.
இத்தகுச் சிறப்பு பெற்ற தலத்தில் ஆண்டு தோறும் ஆடி வெள்ளிக்கிழமையன்று, விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு ஆடி கடைசி வெள்ளி முன்னிட்டு, கோலவில்லி தாயார் விசேஷ ஆபரணங்கள், பல வண்ண நறுமண மலர் மாலைகள் சூடி சர்வலங்காரத்தில் பிரகார உலாவாக வந்து ஊஞ்சல் மண்டபத்திற்கு நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க கோலவில்லி தாயார் ஊஞ்சலில் எழுந்தருளி அருள்பாலிக்க, அவருக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.





















