கும்பகோணம், டிச. 20 –
கும்பகோணம் அடுத்த பாபநாசத்தில் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான நிலையில் நின்று கொண்ட பயணம் செய்யும் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி அடுத்த பேருந்தில் அனுப்பி வைக்கும் அதிகாரிகள் செயல்களை பேருந்து பயணிகள் பொதுமக்கள் என அனைவரும் அவர்களின் இச்செயலைப் பாராட்டுகிறார்கள்.
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்காவில் மாணவ-மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்ல அரசு பேருந்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். பாபநாசத்தில் பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவ மாணவிகள் காலை மற்றும் மாலையில் சில பேருந்துகளில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட நேர்ந்தால் மாணவர்கள் மட்டுமன்றி பயணிகளுக்கும் அசம்பாவித சம்பவம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனையொட்டி கும்பகோணம் கோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் உத்தரவின்படி பொது மேலாளர் ஜெபராஜ் நவமணி ஆகியோர் அறிவுறுத்தலின் படி பாபநாசம் பகுதியில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது அதன்படி மேலாளர் பாலமுருகன் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் அலுவலர்கள் பாபநாசம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி வந்த மாணவர்களுக்கு அறிவுறுத்தி வேறு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.