அய்யம்பேட்டை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை சர்வீஸ் சாலையில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் சரவணகுமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை அந்நிறுவனத்தின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் ஒரு புறமாக சரிந்து அதிலிருந்த பெட்ரோல் கசிந்ததாக கூறப்படுகிறது. உடனே சரவணகுமார் இருசக்கர வாகனத்தை நிமிர்த்தி வைத்து விட்டு அலுவலகத்துக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சாலையில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றியும், மண்ணை அள்ளி கொட்டியும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்து தீயில் கருகியது.
திடீரென மோட்டார் சைக்கிள் எரிந்தது அதிக வெப்பத்தின் காரணமாகவா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அச்சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

















