காஞ்சிபுரம், டிச. 20 –
காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான்கேட் பகுதியில் மாவட்ட தலைவர் நந்தகோபால் தலைமையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் விவசாயக் கடன் வழங்க குறியீடு நிர்ணயித்து பணியாளர்களை கண்ணிய குறைவாக நடத்தும் போக்கை கைவிட வேண்டும், மாநில அளவில் கடன் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி வாய்மொழி உத்தரவை கைவிட வேண்டும்,
அரசாணைப்படி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கருணை ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், பொங்கல் தொகுப்பினை பேக்கிங் செய்து வழங்கிட வேண்டும், காலிப்பபணியிடங்களை நிரப்பிட வேண்டும், உள்ளிட்ட 15அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் உட்பட சுமார் 150க்கும் மேற்பட்டோர் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இக்கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற ஜனவரி மாதம் 5 ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அறிவித்துள்ளனர்.





















