சென்னை, பிப். 12 –
விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்திய ரயில்வே மல்யுத்த வீரர்களுக்கு அதிநவீன மல்யுத்த அகாடமியை விரைவில் வழங்க ரயில்வே அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
உலகத்தரம் வாய்ந்த மல்யுத்த அகாடமியை ரயில்வேயில் வழங்குவதற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வகையில், தில்லி கிஷன்கஞ்சில் சுமார் ரூ. 30.76 கோடி மதிப்பில் இந்தப் பயிற்சி மையத்தை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மிகப்பெரியதாக நவீன வசதிகளுடன் இந்த மல்யுத்தப் பயிற்சி மையம் இருக்கும். வரும் காலங்களில் பல வளரும் மல்யுத்த வீரர்கள் சாம்பியன் ஆவதற்கு இந்த அகாடமி வாய்ப்பளிக்கும்.
இந்தியாவில் மல்யுத்தத்தை ஊக்குவிப்பதில் இந்திய ரயில்வே முக்கியப் பங்காற்றியுள்ளது. பெரும்பாலான பிரபல மல்யுத்த வீரர்கள் ரயில்வேயைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியா வென்ற பதக்கங்களில் பெரும்பாலானவை இந்திய ரயில்வேயில் இருந்துதான் { சுஷில் (2008 & 2012), சாக்ஷி மாலிக் (2016), எஸ் ரவிக்குமார் மற்றும் பஜ்ரங் (2020)} என்பது குறிப்பிடத்தக்கது.




















