திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தரமான கண்டுமுதல் அரிசி வழங்கிடும் பொருட்டு நடப்பு கொள்முதல் பருவம் 2020-2021-ல் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தின் அரவை முகவர்களாக செயல்பட்டு வரும் தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து தரமான அரிசியினை பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கி வருகிறது.
மண்டலங்களில் கூடுதலாக இருப்பில் உள்ள நெல்லினை கழகத்தில் இணையாத தனியார் புழுங்கல் அரவை ஆலைகள் மூலம் கழக நிபந்தனைகளுக்கு உட்பட்டு “ஓரு முறை திட்டத்தின்” கீழ் வரும் 15ந்தேதி முதல் நவம்பர் 15ந்தேதி வரை அரவை செய்து கண்டுமுதல் அரிசியினை கிடங்கில் ஒப்படைப்பு செய்திட ஏதுவாக தனியார் புழுங்கல் அரிசி அரவை ஆலை உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கடந்த 3ந்தேதி முதல் வரவேற்கப்படுகிறது.
இத்திட்டத்தில் இணைய விரும்பும் அரிசி ஆலை உரிமையாளர்கள், தரமான அரிசியை அரவை செய்து வழங்க ஏதுவாக தங்கள் அரிசி ஆலைகளில் கலர் சார்ட்டர் உள்ளிட நவீன அரவை கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட முதுநிலை மண்டல மேலாளர் மண்டல மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.